Ads (728x90)


அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான இன்றைய கடையடைப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கேட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய அரசு ஆட்சிக்கு வந்த பின்பு, இதுவரை காலமும் போரால் உயிர் நீத்த எமது சகல உறவுகளையும் நினைவு கூரும் உரிமை நிர்வாக ரீதியாவும், நீதிமன்ற உத்தரவுகள் மூலமாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்.

ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சம வாயங்களின் படி உயிரிழந்தவர்களை தனியாகவும், கூட்டாகவும் நினைவுகூருவது அடிப்படை உரிமையாகப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலும் அவற்றை மீறும் வகையில் இந்த அரசு ஜனநாயக விரோதமாக இவற்றை தடை செய்கிறது.

உயிர்நீத்த எமது உறவுகளை நினைவு கூரும் உரிமைகளுக்கு ஏற்படுத்தப்படும் தடைகளை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு நாம் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய பரப்பில் ஒன்றிணைந்த பத்து அரசியல் கட்சிகளின் சார்பில் பொலிஸாரின் நீதிமன்ற தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் எமது கோரிக்கையை வலியுறுத்திய உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று சனிக்கிழமை முழுமையாக மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை தமிழ் இனம் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையிலான முழுமையான கடையடைப்பு, பொது வேலை நிறுத்தத்துக்கு ஒன்றிணைந்த பத்து அரசியல் கட்சி சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.

தமிழ் மக்களின் இனத்துவ அடையாளம், நில உரிமை, சமய மற்றும் கலாசார உரிமைகள் தீவிரமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில் உயிர்நீத்த எமது உறவுகளை நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தியும் இதன் மறுதலிப்பு தீவிரமாக அரசால் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் இனம் தனது ஆட்சேபனையை வெளிக்காட்டும் முகமாக இன்று திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு தழுவிய முழுக்கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எனவே சகல துறைகளையும் சார்ந்த எமது அன்புக்குரிய உறவுகள் இந்த வேண்டுகோளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு பத்து தமிழ்த் தேசிய கட்சிகள் சார்பில் வேண்டி நிற்கிறோம்.

இதுதொடர்பில் அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவை சோ.சேனாதிராசா

தலைவர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி.


Post a Comment

Recent News

Recent Posts Widget