Ads (728x90)

சூரியனும் சந்திரனும் பூமிக்கு நேராக ஒரே பாதையில் வரும்போது அமாவாசை உருவாகிறது. அமாவாசையில் முன்னோர்களை வணங்கினால் நன்மை ஏற்படும். அதிலும் ஆடி அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு.ஆடி அமாவாசை நாளில் வீட்டிலோ, கோவிலிலோ முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷமானதாகும்.இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாகப் பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை தேவர்களுக்கு பகல் காலம். இதை "உத்தராயன காலம்' என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை "தட்சிணாயன காலம்' என்றும் அழைக்கின்றனர்.புராணப்படி, தட்சிணாயன காலம் எனப்படும் 

இரவுக் காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும், அவர்களை தேவர்களால் எதுவும் செய்யமுடியாமல் அவதிப் பட்டார்கள் எனவும், அவர்களைக் காக்கவே இந்த மாதங்களில் அம்மனும் கிருஷ்ணரும் அவதாரமெடுத்து வந்ததாகவும் புராணம் சொல்கிறது.துஷ்டசக்திகளின் ஆதிக்கத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்சினை உருவாகும் என்பதால்தான், ஆடி மாதத்தை பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து, அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடமிருந்து காக்க அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட புராணம் சொல்கிறது.

ஒரு குடும்பத்தைச் சார்ந்த இறந்துபோன முன்னோர்கள், தம் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில்தான் இறைவன், ஆடி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.இறந்தவர்களின் ஆத்மாக்கள் மகிழ்ச்சியுடன் தன் வம்சத்தினரைக் காணப்போகிறோம் என்ற ஆவலோடு வருவார்கள். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கினால் நமது வம்சத்திற்கே எந்த தீங்கும் ஏற்படாது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை, நோய், வறுமை போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது முன்னோர்களை வணங்காமல் இருப்பதே என்கிறது கருட புராணம்.

நம் முன்னோர்களுக்கு உகந்த புனித காலங்களில் தர்ப்பணம் செய்யும்போது தரப்படுகிற பிண்டமும், பசுவுக்கு வழங்குகிற கீரையும், அன்னதானம் போன்றவையும் சில காலங்களுக்கு முன்பு இறந்த ஆத்மாக்களையும் சென்றடைகிறது. அத்துடன் எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன நம் முன்னோர்கள், இன்றைய காலத்தில்  வேறெங்கோ பிறந்திருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கிற உணவு, அவர்கள் சாப்பிடுகிற உணவு, நாம் புனித காலங்களில் தர்ப்பணம் செய்த பலனால் கிடைக்கிறது. அதனால் அவர்கள் பசிக்கொடுமையில்லாமல் வாழ்வார்கள்.இன்னும் சுருக்கமாகச் சொன்னால், நமக்கு வறுமை நிலை இல்லாமல், பசிக்கொடுமை இன்றி சரியான நேரத்தில் உணவு கிடைக்கிறதென்றால் அதற்குக் காரணம், நம் வமசத்தினர் எங்கோ முறையாக தர்ப்பணம் செய்து வருவதால்தான் என்பதை கருட புராணம் விளக்கிச் சொல்கிறது. 

அதனால் ஆடி அமாவாசை போன்ற முன்னோர்களுக்கு உகந்த காலங்களில் அவர்களை வணங்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது.நம் முன்னோர்கள் ஆத்மரூபமாக அவர்களுக் குரிய புனித காலங்களில் நம் வீடுதேடி வரும்போது, முறைப்படி தர்ப்பணம் போன்ற பித்ரு வழிபாடு செய்யப்படாத வீடாக அது இருந்தால், "நமக்கு வம்சத்தினர் தரும் மரியாதை இதுதானா?' என்று மனம் வருந்தி திரும்பிவிடுவார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை போன்றவை ஏற்படுகிறது. 

ஆடி அமாவாசை தினத்தில்தான் நமது முன் ஜென்ம பாவங்கள் விலகுவதாகக் கூறப்படுகிறது.பித்ருபூஜைக்கு மிகப்பெரிய செலவு என்பதெல்லாம் இல்லை. காய்கறிகளை தானம் தரவேண்டும். அதில் முக்கியமாக பூசணிக்காய் தானம் செய்தே ஆக வேண்டும். அப்படி செய்வதால் துஷ்ட சக்திகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும்.பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதால், பூசணிக்காயை தானம் செய்யும்போது அசுரன் நம்மைவிட்டு விலகுவதாக ஐதீகம். அதுவும் ஆடி அமாவாசையன்று இவ்வாறு பூஜையில் தானம் செய்வது விசேஷம்.

இயற்கை மரணமில்லாமல் ஏதாவது ஒரு துர்மரணத்தால் எவரேனும் இறந்திருந்தால், அந்த ஆத்மா இறைவனடி சேராமல் அவதிப்படும்; அல்லாடும். முறைப்படி வழிபாடு செய்து தம் ஆத்மாவை இறைவனடி சேர வைக்காத தன் குடும்பத்தினர்மீது கோபம்கொண்டு, தீங்கு செய்யக்கூட துணிந்துவிடும்.அதனால், அந்த ஆத்மாக்களை சாந்தப்படுத்தி இறைவனடி சேரவைக்க, ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால்  அவை சாந்தியடையும். ஸ்ரீமன் நாராயணனே அந்த ஆத்மாவை சாந்தப்படுத்தி உதவி செய்வதாக கருட புராணத்தில் கூறப் பட்டிருக்கிறது.

கோவிலில் தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடிந்தபிறகு வீட்டிற்குத் திரும்பிவந்து, அவர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசி வாசனை பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரை மனமார வாழ்த்துவார்கள்.முன்னோர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து வணங்கவேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு உணவுதானம் செய்வது நல்லது.

முன்னோர்களின் மன வருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன் கடும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான்.நாமும் நம்மால் இயன்ற எளிய ஆடிஅமாவாசை தர்ப்பணம் செய்து முன்னோர் களின் ஆசியைப் பெறுவோம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget