இலங்கை அணி முன்னதாக அடைந்த தோல்விகள் குறித்தும் முன்னாள் தலைவர்கள் குறித்தும் எந்த சிந்தனையும் இல்லை. நடைபெறவுள்ள இன்றைய போட்டிகுறித்தே அனைத்துக் கவனமும் இருக்கிறது என்று புதிய அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார்.
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–-0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் இன்று நான்காவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் வெற்றி இந்த ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று எதிர்நோக்குகின்றனர். இந்தப் போட்டியிலும் வென்று 4-–0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.
ஆனாலும் லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது.
இந்திய அணி தொடரை வென்று விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய அணித் தலைவர் கோஹ்லி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இன்றைய போட் டியில் புது வீரர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததால் இலங்கை வீரர்கள் நெருக்கடியில் உள்ளனர்.
ஆனாலும் கடைசி இரண்டு போட்டிகளில் இலங்கை போராடியே வீழ்ந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும்.
உபுல் தரங்கவிற்கு ஐ.சி.சி. விதித்த தடையினால் தலைவர் பொறுப்பை ஏற்ற சாமர கபுகெதரவும் காயத்திற்குள்ளான நிலையில் தலைவர் பதவி மலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள போட்டி குறித்து நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் லசித் மலிங்க குறிப்பிடுகையில்,
முந்தைய தோல்விகளும் முன்னாள் அணித் தலைவர்கள் குறித்தும் எமக்கு எந்த சிந்தனையும் இல்லை. எதிர்வரும் போட்டிகளில் நாம் எப்படி செயற்பட வேண்டும் என்பதே எமது அணியின் குறிக்கோளாக உள்ளது.
அதேவேளை சாமர கபுகெதர, குணதிலக்க, சந்திமால் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். அதிரடி வீரர் டில்ஷான் முனவீர அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளைய களநிலையை ஆராய்ந்தே ஆடும் பதினொருவர் அணியை நாம் தேர்வுசெய்வோம். அநேகமாக திரிமான்னவும் டில்ஷான் முனவீரவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளது என்றார்.

Post a Comment