வளர்ந்து வரும் இலங்கை- சீன உறவுகள் குறித்து இந்திய நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 70 வீத உரிமையை 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு சீனாவுக்கு வழங்கியுள்ளமை குறித்து, தேவிரூப மித்ரா என்பவர் எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:
இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்தியா நம்புகிறது, எனினும், இந்தத் துன்பகரமான விற்பனை போன்ற நிலை அண்டை நாட்டில் உள்ள ஏனைய திட்டங்களுக்கும் ஏற்படுமோ என்ற அச்சமும் அதற்கு உள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தை புதுடில்லி வரவேற்கவில்லை. ஆனால், சீனாவின் கடன் பளுவில் இருந்து தப்பிப்பதற்கு, கொழும்புக்கு வேறு நல்ல வழி இல்லை. இதனால், அம்பாந்தோட்டையைச் சீன நிறுவனம் நிர்வகிப்பதை ஏற்றுக் கொள்வதைவிட இந்தியாவுக்கு வேறு தெரிவு இல்லை.
இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் மற்றும் அதில் பாதுகாப்பு குறித்த சில பிரிவுகளை உட்சேர்ப்பதில், அமெரிக்காவுடன் இந்தியாவும், தொடர்புபட்டிருந்தன என்றும் உறுதிப்படுத்த முடிகிறது.
எந்தவொரு இராணுவச் செயற்பாடுகளையும் இங்கு முன்னெடுப்பதற்கு கடுமையான தடைகள் விதிக்கப் பட்டுள்ளன என்றும் இராணுவச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் முழு உரிமையும் இலங்கைக்கே உள்ளது என்றும் ஒப்பந்த வரைவில் கூறப்பட்டிருந்தது.
துறைமுக பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் அனை வருமே இலங்கையர்களாக இருக்கவேண்டும் என்ற விதிமுறையும் சேர்க்கப்பட்டுள்ளது -என்றுள்ளது.
Post a Comment