புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கப்படும் என்று சிறப்புத் தீர்ப்பாயம் அறிவித்தது.வழக்கு தொடுனர் மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் நேற்று நிறைவடைந்த நிலையிலேயே தீர்ப்புக் கான திகதியை தீர்ப்பாயம் நேற்று நிர்ணயித்தது.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கோரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.
வழக்குத் தொடுனர் தரப்பு மற்றும் 9 எதிரிகளின் சாட்சியப் பதிவுகள் கடந்த 29ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. இரு தரப்பு தொகுப்புரைகள் நேற்றுமுன்தினமும் நேற்றும் முன்வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பாயம் கட்டளையிட்டிருந்தது.
அதனடிப்படையில் அரச தரப்பு தொகுப்புரை நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. அதில் இந்த வழக்கில் 2ஆம் 3ஆம் 5ஆம் 6ஆம் எதிரிகள் மீதான வண்புணர்வு மற்றும் கொலைக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் 4ஆம் 8ஆம் 9ஆம் எதிரிகள் மீதான சதித் திட்டம் தீட்டியமை மற்றும் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் அரச தரப்பு உறுதியாக எடுத்துக் கூறியது. மேலும் 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகள் நிரபராதிகள் என்றும் அது சுட்டிக்காட்டியது.
இந்த நிலையில் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைகள் நேற்று முன்வைக்கப்பட்டன.
வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி மன்றாடியார் அதிபதி பி. குமாரரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நாகரத்தினம் நிஷாந்த், மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர். எதிரிகள் தரப்பில் 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன , மற்றும் சட்டத்தரணி லியகே ஆகியோரும், 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையான எதிரிகள் சார்பில் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை முன்னிலையாகியிருந்தார். எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் தீர்ப்பாயத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன தனது தொகுப்புரையை முன்வைத்தார்.
“இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இப்ரான் என்பவரின் சாட்சியத்தை வழக்கு தொடுனர் தரப்பு முன்நிறுத்தி உள்ளது.
அந்தச் சாட்சி ஏற்கனவே மோசடி குற்றசாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நபராவார். அவரது சாட்சியத்தை முன்னிலைப்படுத்த முடியாது. அந்த சாட்சியம் நம்பகத்தனைமை அற்றது. சுவிஸ் குமார், குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் எனில் , ஏன் பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி அது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை.
அதேபோன்று குற்றச் செயலை கண்ணால் கண்ட சாட்சியம் என தீர்ப்பாயத்தில் முற்படுத்தப்பட்ட இரு சாட்சிகளும் , முரண்பாடான சாட்சியங்களையே அளித்துள்ளன. சுரேஷ்கரன் என்பவர் சாட்சியம் அளிக்கையில், “வன்புணர்வை காணொலி, ஒளிப்படங்கள் எடுத்தது தொடர்பில் தெரியாது என சாட்சியம் அளித்துள்ளார். அதே இடத்தில் நின்ற மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன், காணொலி மற்றும் ஒளிப்படங்கள் எடுத்தது என சாட்சியம் அளித்துள்ளார். இந்த இரு சாட்சியங்களும் முரணான சாட்சியங்களை வழங்கி உள்ளது.
எனவே இந்தக் குற்றச் சம்பவம் தொடர்பில் எனது தரப்பினருக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார். அதனை தொடர்ந்து 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி தொகுப்புரையில், “இந்த வழக்கின் கண்கண்ட சாட்சியாக முற்படுத்தபப்ட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் தினமும் ஒரு போத்தல் சாராயமும் 4 போத்தல் கள்ளும் குடிப்பேன் என அவரது சாட்சியத்தின் போது தெரிவித்திருந்தார்.
தினமும் மதுபோதையில் இருக்கும் குடிக்கு அடிமையான ஒருவர் குடிபதற்காக எதுவும் செய்யத் துணிந்தவர். அவருக்கு குடிக்க கொடுத்து தமக்கு வேண்டிய காரியங்களை எவரேனும் செய்து கொள்ள முடியும். எனவே அவரின் சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது” எனத் தெரிவித்தார். குடிகாரன் சாட்சி சொல்ல கூடாது என சட்டம் சொல்லி இருக்கா ? என தீர்ப்பாயம்கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த சட்டத்தரணி, அவ்வாறு இல்லை. இந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளது என கூறினார்.
தொடர்ந்து தொகுப்புரையில் தெரிவிக்கையில் , அடுத்த கண்கண்ட சாட்சியமாக முற்படுத்தப்பட்ட மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் , இவர் சட்டவிரோதமாக வீட்டில் கள்ளு விற்பனை செய்பவர். அதற்காக பல தடவைகள் அவரைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தண்டம் செலுத்தியுள்ளார்.அவர் தனது சாட்சியத்தில் 2ஆம் , 3ஆம் , 5 ஆம் , மற்றும் 6ஆம் எதிரிகள் தன்னுடைய வீட்டில் இருந்து கள்ளு அருந்தும் போதுதான் வித்தியாவை கடத்த திட்டம் தீட்டியதாகவும் , தன்னுடைய வீட்டில் வைத்துதான் பொறுப்புக்கள் பகிரப்பட்டதகவும் சாட்சியமளித்துள்ளார். அத்துடன் மாணவி கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு , படுகொலை செய்யப்படும் வரையில் தான் அவர்கள்கூட இருந்ததாகவும் சாட்சியமளித்துள்ளார். அவ்வாறு எனில் அவர் சாட்சியமாக இந்தத் தீர்ப்பாயத்தில் முற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவர் இல்லை.
அவரையும் எதிரியாக இந்தத் தீர்ப்பாயத்தில் நிற்க வேண்டியவர். ஏன் அவரை எதிரியாக சேர்க்கவில்லை? என்பது தெரியவில்லை. அடுத்த முக்கிய சாட்சியாக முற்படுத்தப்பட்ட இப்ரான் , இவர் மோசடி வழக்கில் குற்றவாளியாக கண்டு தண்டனை கைதியாக சிறையில் இருப்பவர். அவ்வாறான மோசடிச் குற்றச்சாட்டில் உள்ள ஒருவரின் சாட்சியம் நம்பகத்தன்மை உடையதா ? ஒரு குற்றத்திற்கு ஒரு நோக்கம் இருக்கலாம். ஆனால் இந்தக் குற்றத்துக்கு இரு நோக்கங்கள் உள்ளதாக வழக்கு தொடுனர் தரப்பு குற்றறு்சாட்டுகின்றது.
6ஆம் எதிரி மாணவியை ஒரு தலையாகக் காதலித்ததாகவும் , அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து அவமானப்படுத்தியதால் பழிவாங்க செய்யப்பட்டதாகவும். மற்றையது சுவிஸ் நாட்டில் வசிக்கும் நபர் அங்குள்ள மாபியா கும்பல் கேட்டதற்கு இணங்க ஆசியப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யும் நேரடி காணொலிக் காட்சியாக இந்தக் குற்றம் புரியப்பட்டதாகவும் அரச தரப்புக் கூறுகிறது.
இதில் முதாலவது நோக்கமாக கூறப்படும் ஒரு தலைக் காதல் பிரச்சனை தொடர்பில் மாணவியின் தாய் சாட்சியமளிக்கவில்லை. அவரிடம் முதன்மை விசாரணையின் போது , மாணவி பாடசாலை சென்று வரும் போது பிரச்சனை ஏதேனும் இருந்ததா ? மாணவிக்கு காதல் தொடர்பு இருந்ததா ? என கேட்ட போது, இல்லை எனப் பதிலளித்துள்ளார். குறுக்கு விசாரணையின் போது, பாடசாலை சென்று வரும் போது யாரேனும் தொந்தரவு செய்வதாக வீட்டில் கூறியுள்ளாரா? எனக் கேட்ட போது அதற்கும் இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.
மாணவியை 6ஆம் எதிரி ஒரு தலையாகக் காதலித்து தொந்தரவு பண்ணி இருந்தால் , மாணவியின் வீட்டாருக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.
அடுத்து சம்பவ இடத்தில் நின்றதாக கண்கண்ட சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மற்றும் மாப்பிள்ளை எனும் புவனேஸ்வரன் ஆகியோர் முரணான சாட்சியங்களை அளித்துள்ளனர். சுரேஷ்கரன் வீடியோ எடுத்தது தெரியாது என சாட்சியம் அளிக்கின்றார். மாப்பிள்ளை வீடியோ எடுத்தார்கள் என சாட்சியம் அளித்தார். அதேபோன்று சுரேஷ்கரன் மாணவியை இழுத்து சென்றதாக சாட்சியம் அளித்தார்.
மாப்பிள்ளை மாணவியை நால்வர் கைகள் மற்றும் கால்களை பிடித்து தூக்கி சென்றதாக சாட்சியம் அளித்துள்ளார். அதேபோன்று சுரேஷ்கரன் மாணவியின் உடைகளை பாழடைந்த வீட்டுக்குள் வைத்து கழட்டியதாக சாட்சியம் அளித்தார். மாப்பிள்ளை பற்றைக்குள் வைத்து உடைகளை கழட்டியதாக சாட்சியம் அளித்தார். சட்ட மருத்துவ அதிகாரி சாட்சியத்தின் போது, மாணவியின் நகங்கலினுள் தசை துண்டுகள் இருந்ததாகவும் அதனால் அதனை பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.
நகங்கலினுள் தசைகள் இருந்து இருப்பின் மாணவி எதிரிகளுடன் போராடியதால் அவர்களுக்கு நக கீறல்கள் ஏற்பட்டமையால்தான் எதிரிகளின் தசைகள் நகங்கலினுள் இருந்து இருக்கும்.அவ்வாறு எனில் மாணவியின் கைகள் சுதந்திரமாக எதிரியுடன் போராட கூடிய நிலையில் இருந்துள்ளது. எனவே மாணவியின் கைகளை அழுத்தி பிடிக்கவில்லை. ஆனால் கண்கண்ட சாட்சியம் என சாட்சி அளித்தவர்கள் கைகளை எதிரிகள் பிடித்து இருந்ததாகக் கூறினார்கள்.
அதேபோன்று மாணவியின் தலையில் ஏற்பட்ட காயம் விழுந்ததால் ஏற்பட்ட காயம் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
ஏனெனில் விழுந்து இருந்தால் மண்டையோடு வெடித்து இருக்கும் என , தலையில் ஏற்பட்ட காயம் மட்டமான ஆயுதத்தால் தாக்கியதால் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார். அதனால் மனைவியை தலையில் தாக்கிய பின்னர் வன்புணர்வு செய்துள்ளனர்.இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய போதுமான சான்றுப் பொருள்கள் ஜின்டேக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கபப்ட்டிருந்தன. அதன் பரிசோதனையில் எந்த அறிக்கையும் எதிரிகளுடன் ஒத்து போகவில்லை. எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எதிரிகள் மீது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. உண்மை குற்றவாளிகள் தப்பி சென்றுவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் தொகுப்புரையில், “கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மாணவியின் கையை யார் பிடித்தது , காலை யார் பிடித்தது என தெளிவாக சாட்சியமளித்தார். அவர் ஒளிப்படங்கள் மற்றும் காணொலி எடுத்தது தொடர்பில் தெரியாது எனச் சாட்சியம் அளித்துள்ளார். காணொலி எடுத்தைப் பார்த்ததாக கூறிய மாப்பிள்ளையின் சாட்சியம் நம்பகத்தன்மையற்றது என 5 ஆம் எதிரியின் சட்டத்தரணி கூறியள்ளார். அதனையே நானும் கூறுகிறேன்.
ஆலடிச் சந்தியில் 12ஆம் திகதி (மாணவி கடத்தப்படுவதற்கு முதல் நாள்) சுவிஸ்குமார் உள்ளிட்டவர்களை வாகனத்தில் கண்டதாக சாட்சியம் அளித்த இலங்கேஸ்வரன், தான் கடையில் நின்று பார்த்த போது சுவிஸ்குமார் கறுத்த கண்ணாடி அணிந்து வித்தியாவை பார்த்ததை பார்த்தேன் என சாட்சியமளித்தார். பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் கறுப்பு கண்ணாடி அணிந்து பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். அவர்கள் யாரை எங்கே பார்க்கின்றார்கள் என்பதனை எதிரில் உள்ளவர்கள் அவதானிக்க முடியாது என்பதற்காகவே அவ்வாறு கறுப்புக் கண்ணாடிகள் அணிவார்கள்.
அப்படி இருக்கையில் சுவிஸ்குமார் கறுப்பு கண்ணாடி போட்டு வித்தியாவைதான் பார்த்தார் என எவ்வாறு அவரால் சாட்சியம் அளிக்க முடிந்தது” என தெரிவித்தார். அதன் போது சட்டத்தரணி கறுத்த கண்ணாடி கொண்டுவந்து அதனை தான் அணிந்து காட்டி தன்னுடைய கருமணி எங்கே பார்க்கின்றது என அவதானிக்க முடியாது என தீர்ப்பாயத்துக்குக் கூறினார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் பார்க்கும் திசையை வைத்து யாரைப் பார்க்கிறீர்கள் எனக் கூற முடியும் என சுட்டிக்காட்டினர். அதன் போது நீதிபதி மா.இளஞ்செழியனும் கறுத்த கண்ணாடியை அணிந்து பார்த்தார்.
மற்றுமொரு முக்கியமான சாட்சியமாக முற்படுத்தபப்பட்ட இப்ரான் என்பவர் மோசடிக்காரன். அவர் மோசடி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிப்பவர். அவர் இந்த தீர்ப்பாயத்தில் மோசடி சாட்சி அளித்துள்ளார்.
தனக்கு இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் சுவிஸ்குமார் மாத்திரம்தான் கூறியதாகவும் வேறு எந்த எதிரிகளும் இந்தக் குற்றச்சம்பவம் தொடர்பில் தன்னுடன் கதைக்க வில்லை என அவர் சாட்சியம் அளித்துள்ளார்.
அதேபோன்று தான் சிறையில் , சிறைசாலை அத்தியட்சகரின் அறையில் மருத்துவ பரிசோதனையை முடித்து வெளியே வந்த போதே குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகரை கண்டதாக அவர் சாட்சியமளித்தார்.
ஆனால் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியம் அளிக்கையில் ,அவ்வாறு மருத்துவர்கள் எவரையும் தான் காணவில்லை என சாட்சி அளித்தார்.
அதேபோன்று தான் கடனட்டை (கிரடிட்கார்ட்) மோசடி வழக்கில்தான் தண்டனை பெற்றதாகவும், அதுவும் தான் செய்யாத குற்றம் எனவும் , தனது நண்பன் செய்த குற்றத்திற்காகவும் தான் சிறை தண்டனை அனுபவிப்பதாக சாட்சியமளித்தார். ஆனால் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியம் அளிக்கையில், வெளிநாடுகளுக்கு ஆள்களை அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதனால்தான் அவர் சிறை தண்டனை அனுபவிப்பதக சாட்சியமளித்தார்.
இப்ரான் தனது சாட்சியத்தில் சொல்கின்றார், சுவிஸ் நாட்டில் மாபிய கும்பல் உள்ளது. அந்தக் கும்பலால் ஆசிய பெண்ணை கடத்தி வன்புணர்ந்து படுகொலை செய்வதனை நேரடிக் காணொலி எடுக்க வேண்டும் என சுவிஸ் குமாருடன் உடன்பாடு செய்ததாக. ஏன் ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில்தான் உள்ளாரா ? சிங்கப்பூரில் எத்தனை அழகான பெண்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் இலங்கையில் புங்குடுதீவில் பாடசாலையில் கற்கும் மாணவிதான் வேண்டுமா ? அந்த சுவிஸ் மாபியா கும்பலுக்கு, இந்த கதை எல்லாம் திரைப்பட கதை போன்றுள்ளது.
இந்த கதையை மோசடி குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றவர் சட்சியமாக கூறியுள்ளார். இதனை நம்பவே முடியாது. அத்துடன் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் எனது தரப்பான 4ஆம் எதிரி , 7ஆம் எதிரி மற்றும் 9ஆம் எதிரி ஆகியோர் கொழும்பில்தான் நின்றனர். 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனத்தில் எனது தரப்பை சேர்ந்தவர்களை கண்டதாக இலங்கேஸ்வரன் என்பவர் இந்த மன்றில் கூறிய சாட்சி சொல்லிக்கொடுக்கபப்ட்ட பொய் சாட்சியாகும்.
இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய 1 தொடக்கம் 22 வரையிலான சான்று பொருள்கள் எவையும் எனது தரப்பினர் குற்றவாளிகள் என காண்பதற்கு ஏதுவாக இல்லை.
எனது தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் எவையும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என தனது தொகுப்புரையில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு தொகுப்புரை முடிவுறுத்தப்பட்டது. வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் எழுத்துமூலம் முன்வைப்புக்கள் இருப்பின் அதனை நாளை வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
எதிர்வரும் 27ஆம் திகதி மாணவி கொலை வழக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தீர்ப்பாயம் அறிவித்தது. அன்றைய தினம் மாணவியின் தாயாரை தீர்ப்பாயத்தில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்புமாறு பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. 11ஆவது சந்தேகநபராக கைது செய்யப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரை 27ஆம் திகதி தீர்ப்பாயத்தில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்க மறியிலில் வைக்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Post a Comment