
சீனாவில் உள்ள டியான்ஜின் நகரில், டியான்ஜின் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 102-வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனையான அரினா அபலென்காவை எதிர்த்து ஷரபோவா ஆடினார். இப்போட்டியில் ஷரபோவாவுக்கு சவால் விடுக்கும் வகையில் அரினா கடுமையாக போராடினார். இருப்பினும் டென்னிஸ் போட்டிகளில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஷரபோவாவை அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை. இறுதியில் ஷரபோவா 7-5, 7-6 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது ஷரபோவா வெல்லும் 36-வது சாம்பியன் பட்டமாகும்.
மேலும், ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதால் விதிக்கப்பட்ட தடைக்காலத்துக்கு பிறகு ஷரபோவா வெல்லும் முதலாவது சாம்பியன் பட்டமாகும் இது. கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இத்தாலியன் கோப்பை டென்னிஸ் போட்டி யில் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
பெடரர் வெற்றி
ஷாங்காயில் நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி யின் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் நேற்று ரபேல் நடாலை எதிர்த்து ரோஜர் பெடரர் ஆடினார். இப்போட்டியில் தனது பரம வைரியான நடாலை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ரோஜர் பெடரர் வெற்றி கொண்டார். இதன் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ரோஜர் பெடரர் வெல்லும் 94-வது சாம்பியன் பட்டமாகும் இது. இதன் மூலம் அதிக ஒற்றையர் சாம்பியன் பட்டங்கள் வென்ற இவான் லெண்டிலின் சாதனையை ரோஜர் பெடரர் சமன் செய்தார்
Post a Comment