இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அபுதாபி சேக் சைட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதுதான் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாகிஸ்தானுடனான மூன்று வகையான போட்டித் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஏற்கனவே இங்கு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வெள்ளையடித்தது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது.
இந்தத் தோல்விக்கு இலங்கை அணி வீரர்களின் இடமாற்றமே முக்கிய காரணம் என குமார் சங்கக்கார குற்றம்சாட்டியிருந்தார். இலங்கை அணியின் முக்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் தனுஷ்க குணதிலக ஆகிய இருவரும் அணியில் இல்லாமல் போனது இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.
அதேவேளை குசல் மெண்டிஸை ஐந்தாவதாக களமிறக்கி சந்திமாலை ஆரம்பத்திலேயே அனுப்பி அணியின் சீரற்ற தன்மையை ஆரம்பத்திலேயே உருவாக்கிவிட்டதும் ஒருவேளை துடுப்பாட்டத்தில் பின்னடைவைக்காண காரணமாக அமைந்திருக்கலாம்.
எது எப்படியோ இன்றைய போட்டியில் இந்த குறைபாடுகள் அனைத்தையும் இலங்கை நிவர்த்தி செய்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் மோதவுள்ளது இலங்கை.
இருபதுக்கு 20 போட்டித் தொடரின் கடைசிப் போட்டி மட்டும் பாகிஸ்தானின் லாகூரில் நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இலங்கை வீரர்கள் தயங்குகிறார்கள். அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மற்றும் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கையளித்துள்ளனர். அதில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பவில்லை என்றும், லாகூர் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் இந்த ஆட்டமும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே நடத்தப்படும் என்று தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய போது, அவர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் அதன் பிறகு பெரிய அணிகள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடைசி போட்டியை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆரம்பத்தில் கருத்து தெரிவித்திருந்த இலக்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டீ சில்வா, வீரர்களின் பாதுகாப்புத்தான் எமக்கு முக்கியம். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்பே நாம் அங்கு சென்று விளையாடுவோம் என்று தெரிவித்திருந்தார்.
அதேவேளை பாகிஸ்தான் தரப்பிலும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இது குறித்து இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.