இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தேசிய தீபாவளி பண்டிகை விழா அலரிமாளிகையில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார்.
அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:
நீண்டகாலமாக எமது நாடு இருளில் இருந்தது. 2015ஆம் ஆண்டு தை மாதம் 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நாடு இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக, சமத்துவமாக வாழும் சூழலை உருவாக்குவதே அந்தப் பயணமாகும்.
அந்தப் பயணத்தை வழிநடத்துவதற்காக சனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணில்விக்கிரமசிங்கவும் இங்கே அமர்ந்துள்ளனர்.
அவர்கள் வெளிவேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள். நீண்ட காலம் ஒற்றுமைப்படாமல் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்து வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று ஒன்றாக இணைந்து நாட்டைப் புதிய பாதைக்கு இட்டு செல்வதற்காக ஒற்றுமையாக இணைந்து செயற்படுகின்றனர்.
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். அவர்கள் இருவரும் இந்தப் பயணத்தில் வெற்றியடையவேண்டும். எமக்காக மாத்திரமல்ல, இந்த நாட்டிற்காகவும் அனைத்து மக்களுக்காகவும் வெற்றிவாகை சூடவேண்டும். அந்தப் பயணத்தில் வெற்றி காணும் முகமாக புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த முயற்சியிலும் நாம் வெற்றிகாணவேண்டும்.
ஒருமித்த நாட்டுக்குள், பிளவுப்படாத, பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள் அனைத்து இனத்தவர்களும் சமத்துவமாக வாழும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான அரசமைப்பை உருவாக்குவதன் மூலமாக நாங்கள் எல்லோரும் ஒரு நாட்டு மக்களாக வாழ முடியும். நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறிக் கொள்வதற்கு விரும்புகின்றோம். எமது மக்களும் அதனை விரும்புகின்றனர்.
அந்தப் பயணத்தை நோக்கியே நாம் நகர்ந்த வண்ணம் உள்ளோம். அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசுக்கு நூற்றுக்கு நூறு வீதம் நாம் ஆதரவு வழங்குவோம். அதில் எந்தவொரு சந்தேகமும் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது ஒரு புனிதமான பயணமாகும். அந்தப் பயணத்தை வெற்றிக்கொள்ள வேண்டும். அந்த வெற்றியின் ஊடாக இந்த நாடு முன்னேறவேண்டும்.
நாட்டில் வாழும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து சுபீட்சம் அடைய வேண்டும். இந்த நாட்டின் இருள் நீங்கி வெளிச்சம் ஏற்படவேண்டும் என்று பிராத்திக்கின்றேன் – என்றார்.
இதேவேளை, 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் உரையாற்றிய இரா.சம்பந்தன், நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கின்றது. அடுத்த ஆண்டு தீபாவளி திருநாளுக்கு முன்னர் இந்த வெளிச்சம் நிரந்தரமாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment