Ads (728x90)

ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் வேண்டுகோளைத் தொடர்ந்து ஏமன் எல்லையைத் திறக்க ஏமன் - சவுதிப் படைகள் முடிவு செய்துள்ளன.

இது குறித்து வியாழக்கிழமை ஏமன் - சவுதி கூட்டுப் படைகள் தரப்பில், ''ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், மக்களுக்கு மனித உரிமை அமைப்புகளின் உதவிப் பொருட்கள் வந்து சேர்வதை அனுமதிக்கிறோம்'' என்று கூறியுள்ளது.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்து சவுதியின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதாகக் கூறி ஏமன் அரசு கூட்டுப் படைகள் திங்கட்கிழமை ஏமன் எல்லையை மூட உத்தரவிட்டன.

இதனைத் தொடர்ந்து எல்லைப் புறத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருவதாகவும், இது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏமன் - சவுதியை எச்சரித்தன.

இந்த நிலையில் ஏமனின் எல்லைகளைத் திறக்க ஏமன் - சவுதி கூட்டுப் படைகள் சம்மதம் தெரிவித்துள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget