Ads (728x90)


முற்போக்கு சிந்தனை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!  

குருபகவான் ராசிக்கு  3-ம் இடமான துலாமில் இருந்து அக். 4ல் 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். மறைவு ஸ்தானத்தை விட்டு குரு சுகஸ்தானத்திற்கு வருவது சிறப்பான விஷயமே. தொழில் ஸ்தானமான ரிஷபத்தின் மீது குருவின் 7ம் பார்வை படுவதால் முடங்கிக் கிடந்த தொழில் வளர்ச்சிமுகமாக மாறும்.  ‘பிசினசில் டாப்பராக’ திகழ்வீர்கள். சனிபகவான் தற்போது 5-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இதனால் குடும்பத்தில் குழப்பம் உருவாகும் என்றாலும் அவரது 7-ம் இடத்து பார்வை மூலம் நன்மை காண்பீர்கள். ராசிக்கு 12ம் இடமான கடகத்தில் உள்ள ராகு, 2019 பிப்.13ல் இடம் மாறி 11-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். இங்கு அவரால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். கேது 6-ம் இடமான மகரத்தில் இருப்பதால் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். செயலில் வெற்றி உண்டாகும். 2019 பிப். 13ல்  5-ம் இடமான தனுசு ராசிக்கு பெயர்ச்சியான பின்  அரசு வகையில் பிரச்னை ஏற்படலாம்.

இனி  பொதுவான பலனைக் காணலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு தாய்வழியில் பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புண்டு. வீடு, வாகனத்தை புதுப்பிக்கவோ அல்லது புதிதாக வாங்கவோ யோகமுண்டு. கணவன், மனைவி இடையே  அன்பு மேலோங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். உடல்நிலை சூப்பராக இருக்கும். நோய் நொடிகளில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை இருக்காது.  பணியிடத்தில் சக ஊழியர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். கடந்த காலத்தில் சந்தித்த தடையனைத்தும் விலகும். நிர்வாகத்திடம் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறலாம்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார ரீதியாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் தற்போது கிடைக்கும் லாபத்தால் ஈடுகட்டப்படும். முதலீட்டை அதிகப்படுத்த புதிய பங்குதாரர்கள் முன்வருவர். சிலர் வங்கி நிதியுதவி மூலம் தொழிலை விரிவுபடுத்துவர். எதிரிகளால் குறுக்கிட்ட முட்டுக்கட்டை அகலும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ஏதாவது ஒருவகையில் வருமானம் வந்து கொண்டேயிருக்கும். வெளிநாட்டில் கலைநிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் நற்பெயர் உருவாகும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு அடைவர். மாணவர்களுக்கு  குருவின் பார்வை பலத்தால் வெளிநாட்டில் படிக்கும் யோகம் உண்டாகும்.  2019 மார்ச் 10க்கு பிறகு  கல்வியில் சாதனை படைப்பர். ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் நற்பெயர் ஏற்படும். போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி மூலம் நல்ல விளைச்சல் காண்பர். கால்நடை வளர்ப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வழக்கு விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கைவிட்டுப்போன பொருள் மீண்டும் கிடைக்கும். பெண்கள்  கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் காண்பர். விலகிச் சென்ற உறவினர்களும், விரும்பி வந்து உறவாடுவர். ஆடை, ஆபரணம் சேர வாய்ப்புண்டு. பணியாற்றும் பெண்கள் செல்வாக்குடன் திகழ்வர். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு சந்தோஷம் காண்பர். 2019 மார்ச் 10க்கு பிறகு  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள்  நடந்தேறும்.  குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் தொழிலில் சேமிக்கும் விதத்தில் அதிக ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்:
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  வெள்ளிக்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு
●  சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம்

Post a Comment

Recent News

Recent Posts Widget