Ads (728x90)

சமீபத்தில் நடிகர் சூர்யா, ஒரு பத்திரிக்கையில் சமூக வலைத்தளங்களின் செயல்பாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ரசிகர்கள் செல்லும் இடம் எல்லாம் செல்பி எடுத்து டார்ச்சர் செய்வதாகவும், நிம்மதியாக எங்கும் செல்ல முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக எழுத்தாளர் சாருநிவேதிதா தனது பேஸ்புக் மூலமாக சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது,
சமீபத்தில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை. விமான நிலையத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள். செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார்.

உங்கள் தந்தை சிவகுமார் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாராம்சம்.

தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய். ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? வெறும் 6000 ரூபாய். அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?
தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். நீங்களெல்லாம் கடவுள்கள். எம்.ஜி.ஆர் ஒரு கடவுள். சிவாஜி ஒரு கடவுள். கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம். ஏனென்றால் அவர் நாஸ்திகர். ரஜினி கடவுள். விஜய் கடவுள். அஜித் கடவுள். நீங்கள் கடவுள். உங்கள் தம்பி கார்த்தி கடவுள். ஏன் முன்பு அப்பாஸ் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவர் கூட கடவுள்தான். அப்படித்தான் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.

நீங்கள் நினைத்தால் முதல் மந்திரியிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்கலாம். ஒரு தமிழ் எழுத்தாளனால் முடியுமா? நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். என் சகாக்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் 200 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ் சமூகத்தில் என்ன அடையாளம்?

அசோகமித்திரன் சென்ற ஆண்டு மரணம் அடைந்த போது அவருக்குக் கூடிய கூட்டம் 25 பேர். அதில் 15 பேர் அவரது உறவினர். மற்ற பத்துப் பேர் அவரது ஆயுட்கால நண்பர்கள். இப்படிப்பட்ட தேசத்தில் கடவுள்களைப் போல், சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள். அவர்களை அப்படி வாழ வைத்துக் கொண்டிருக்கும் சனங்கள் எப்பவாவது செல்பி எடுத்துக் கொள்ள முனைந்தால் அது உங்களுக்குப் பிரச்சினையாகவா இருக்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் சாருநிவேதிதா எழுதியிருக்கிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget