இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 178 ரன்களும், இலங்கை 104 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ததுடன், 660 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து, தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.இந்த நிலையில் கடைசி நாளான நேற்று ஆடிய இலங்கை அணி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் 14 பந்துகளில் பறிகொடுத்து 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தசைப்பிடிப்பு காரணமாக மேத்யூஸ் பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றதோடு தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது. அதே சமயம் டெஸ்டில் இலங்கை அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும். நியூசிலாந்து அணி, தொடர்ச்சியாக வசப்படுத்திய 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி (107 புள்ளி) ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்தியா 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் உள்ளன.
Post a Comment