உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய வேளையில், இங்கிலாந்து நாட்டில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் போலீஸ் அதிகாரி உள்பட மூவர் காயம் அடைந்துள்ளனர். மான்செஸ்டர் நகரத்திலுள்ள ரயில்நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.அந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர்.கத்தியால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர். மக்கள் மீது தாக்கிய நபர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தையடுத்து, ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் எதிர்பார்க்காத சம்பவம் என்றும், தாக்குதலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என கூறிக்கொண்டே மர்மநபர் கத்தியை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
Post a Comment