Ads (728x90)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் சலுகை அரசியலுக்கு அடிபணியாமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எம்முடன் கைகோர்க்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை இனியும் தமிழ் மக்கள் நம்பக் கூடாது. ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாத அந்தக் கட்சியா தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கப் போகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆண்டுகளாக ரணில் அரசுடன் திரைமறைவில் செய்த நடவடிக்கை எல்லாம் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.

ஜனாதிபதி வேட்பாளராகக் கடந்த 11ஆம் திகதி நான் அறிவிக்கப்பட்டபோது தமிழ் மக்கள் பெருமளவில் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். எனவே, எம்முடன் கைகோர்க்குமாறு கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் – முஸ்லிம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து தேசிய அரசு ஏற்கும் வகையில் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானது. மூவின மக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து நிம்மதியாக வாழும் சூழ்நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். எனவே சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் மக்களும் எமக்கு ஆதரவு வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget