அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாட்டுக்கு எந்த துரோகத்தை செய்வதற்கும் தயாராகவிருக்கும் பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
மக்களை ஏமாற்றி தனது அதிகார தாகத்தை தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் நிச்சயமாக நவம்பர் 16ஆம் திகதி முற்றாக தோல்வியடையச் செய்யும் என்பதில் தனக்கு நம்பிக்கையிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். சஜித் பிரேமதாச நேற்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த பகிரங்க சவாலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் உங்கள் தேர்தல் செயற்பாடுகளுக்கு கௌரவத்துக்குரிய மகா சங்கத்தினரை இணைத்துக் கொண்டு பயணிக்க மேற்கொண்ட ஏமாற்றுத் தனமான முயற்சிகளை நான் கடுமையாக நிராகரிக்கின்றேன். எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படும் விடயங்களை திரிபுபடுத்தி தவறான அர்த்தத்தை கற்பித்து உங்களுக்காக அரசியல் விவாதத்திற்கு முன்வருமாறு கடந்த புதன்கிழமை கௌரவத்துக்குரிய மகா சங்கத்தினரிடம் பகிரங்கமாக கேட்டிருக்கிறீர்கள்.
உங்கள் கவனத்திற்காக எனது விஞ்ஞாபனத்தின் பிரதியை முதலில் பெற்றுக் கொண்டது மகா சங்கத்தினரேயாகும். என்னிடம் இந்த நாட்டு மக்களுக்கு மறைப்பதற்கு எதுவும் கிடையாது. ஒற்றையாட்சிக்குள் அதிகூடிய அதிகார பரவலாக்கலை செய்வதற்கு நான் உறுதிபூண்டிருக்கின்றேன். அது பிளவுபடாத அல்லது பிரிக்கப்பட முடியாத அர்த்தத்தையே கொண்டிருக்கும்.
உங்களுக்கு அது ஒற்றை ஆட்சியாக புரிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும். எங்களுடைய ஒற்றுமை மட்டுமல்ல நான் மீண்டும் மீண்டும் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை, சுயாதீனத் தன்மையை பாதுகாப்பதற்காகவே உறுதிப்பாடளித்துள்ளேன். நீங்கள் வழிநடத்தும் அரசியல் கூட்டணி எமது நாட்டின் இதுகால வரையில் கண்டு கொள்ளப்பட்ட அனைத்து அடிப்படைவாதிகளால் நிறைந்து காணப்படுகின்றது.
உங்களுடைய சகோதரரான வேட்பாளருக்கு ஒரு விவாதத்திற்கு முகங்கொடுக்கவோ முக்கியமான கேள்விக்கு பதிலளிக்கவோ தைரியமில்லாததினால் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாமையினால் உங்களால் அதை நாட்டு மக்களுக்கு கூறமுடியும்.
நத்தார் உற்சவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆண்டவனின் சந்நிதானத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். அதனைச் செய்த பிள்ளையானுடைய ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக விடுதலை செய்வதாக உறுதியளித்திருக்கிறீர்கள். பிள்ளையான் கிழக்கு மக்களின் சிறுவர்களை கடத்திச் சென்று ஈழத்திற்காக போராடுவதற்கு அவர்களை தூண்டியவர். நீங்கள் அவரை விடுதலை செய்த பின்னர் அவர் மீண்டும் கிழக்கு மக்களை அச்சுறுத்துவதற்கு பிள்ளையானுக்கு இடமளிப்பீர்களா?
உங்கள் சகோதரருக்கு சார்பாக கருத்து வெளியிட்டிருக்கும் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்தபோது சட்ட விரோதமான முறையில் ஈழத்தை பிரகடனப்படுத்தி ஈழக் கொடியை பறக்க விட்டவராவார். இந்த ஈழக் கோட்பாடுடையவரின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் அளித்திருக்கும் உறுதிமொழி என்ன?
பொலிஸ் அதிகாரிகள் 600 பேரை படுகொலை செய்த, எம்மால் உன்னதமாக ஏற்றுக் கொள்ளப்படும் புனித தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதல் நடத்திய, அரந்தலாவையில் வாழ்ந்த மக்களை கொலை செய்த கருணா அம்மானுடன் நீங்கள் செய்துகொண்டிருக்கும் இரகசிய உடன்படிக்கை என்ன?
உங்களுடைய கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஹிஸ்புல்லா ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதியென கூச்சலிட்டதன் பின் உங்களுடைய சகோதரருக்கு இரண்டாவது தெரிவு வாக்கை பெற்றுத் தருமாறு அவருடைய ஆதரவாளர்களுக்கு கேட்டிருப்பதற்காக அவருடன் நீங்கள் செய்திருக்கும் உடன்படிக்கை என்ன?
அரசியலமைப்பு சதியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் எமது உன்னதமான சட்டத்தை மிதித்துப் போட்ட அரசியல்வாதிகளிடமிருந்து எங்களுடைய இறைமையையும், அரசியலமைப்பு பாதுகாப்பு குறித்த உபதேசங்களுக்கு காது கொடுப்பதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டு மக்கள் உங்களை நிராகரித்தார்கள். ஊடகவிலாளர்கள் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட ஓராண்டு நினைவு தினமான ஜனவரி 06ஆம் திகதி அந்த தேர்தல் நடைபெற்றது அதிசயமான காரியமென்பதை நான் அறிவேன். இந்த ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதிக்கு இடம்பெறுவது விதியாகவும் இருக்கலாம்.
உங்கள் சட்டவிரோத ஆட்சியில் பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியில் தோற்கடிக்கப்பட்டு நீங்களும் உங்கள் தோழர்களும் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பதை முழு நாடும் கண்டு கொண்ட அதே ஆண்டு தினத்தில்தான் இந்த தேர்தலும் நடக்கின்றது.
இந்த ஓராண்டு நிறைவன்று இந்த நாட்டு மக்கள் உங்களுடைய அதிகார தாகத்தை விட அவர்களுடைய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை சாட்சியமாக ஒப்புவிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment