Ads (728x90)

யாழ்ப்பாணத்தின் தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்டது.

சிவபூமி அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட “சிவபூமி அரும்பொருள் காட்சியகம்” சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் நேற்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

சிவபூமி அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலை நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகளைத் திறந்து வைத்தனர்.

அபிராமி கையிலாயபிள்ளை அம்மையாரால் அரும் பொருள்காட்சியகத்தின் முதலாவது தளம் திறந்துவைக்கப்பட்டது.

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை அமரர் பகவதிதேவி கந்தப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரது உறவுகளால் வழங்கப்பட்ட நிதியுதவியில் இரண்டாவது தளம் அமைக்கப்பட்டதால் அவரது மாணவர் ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி அதனைத் திறந்து வைத்தார்.

கந்தர்மடத்தைச் சேர்ந்த அமரர் செல்வி வைத்தியலிங்கம் நினைவாக அமைக்கப்பட்ட மூன்றாவது தளத்தை சட்டத்தரணி அமரர் நீலகண்டனின் துணைவியார் திறந்து வைத்தார்.

தமிழ் மன்னர்களின் சிலைகளை அமைக்க நிதியுதவியளித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரின் பழைய மாணவனும் மருத்துவ நிபுணருமான நிமலன் மகேசன் அவர்களின் நினைவுப் பதிவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் பஞ்சலிங்கம் திரைநீக்கம் செய்தார். சர்வமதத் தலைவர்கள், கற்றறிந்தவர்கள் எனப் பெருந்திரளானோர் விழாவில் பங்கேற்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget