Ads (728x90)

சர்வதேச திருக்குறள் மாநாடு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாடு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை இந்தியாவின் தஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கவிஞர் உடையார்கோவில் குணா யாழ்.ஊடக அமையத்தில் நேற்று  நடாத்தியிருந்தார்.

இதன் போது அவர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு தமிழ் இலக்கியப் பணிகளை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறோம்.

மாலைதீவு, அந்தமான் தீவுகள், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மாநாடுகள் கருத்தரங்குகளை நடாத்தி வந்த நாங்கள் கடந்தாண்டு உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மலேசியாவில் இருக்கின்ற மலேசியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச திருக்குறள் மாநாட்டை முதல் தடவையாக நாடாத்தியிருந்தோம். உலகளாவிய ரீதியில் ஐநூறு பேராளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாடாக அந்த திருக்குறள் மாநாடு அமைந்தது.

அதனைத் தொடர்ந்து புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாண மண்ணிலே வாழும் உணர்வுமிக்க தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் இரண்டாவது சர்வதேச திருக்குறள் மாநாட்டை வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தவுள்ளோம்.

இந்த திருக்குறள் மாநாட்டை தமிழ்த் தாய் அறக்கட்டளை முன்னெடுத்து நடாத்தினாலும் கூட உலகத் தமிழாராச்சி நிறுவனம் இந்தியாவின் மதுரை காமராஐர் பல்கலைக்கழகம், இதய நிறைவு தியான அமைப்பு, ஸ்ரீராமச்சந்திர மிஸன், இலங்கை இந்திய தமிழ்த் தாய் அறக்கட்டளையும் இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஒதுழைப்புடன் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பேராளர்களும் அறிஞர்களும் வருகை தந்திருக்கின்றனர். குறிப்பாக மலேசியாவில் இருந்த 27 பேராளர்களும், தமிழகத்திலிருந்து 150 இற்கும் மேற்பட்ட பேராளர்களும், அதேபோல பிரான்ஸ், குவைத், அவுஸ்திரேலியா பேராளர்கள் வருகை தர இருக்கின்றார்கள்.

இந்த மாநாட்டில் அறிஞர்களுடைய ஆய்வுக் கட்டுரைகளும், சிறப்பு மலரும் வெளியிட இருப்பதோடு மாநாட்டினுடைய முத்தாய்வாக கருங்கல்லினால் செய்யப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலையை மாநாட்டிற்கு வருகின்றவர்களை வரவேற்கும் முகமாக மாநாட்டின் முகப்பில் நிறுவ இருக்கின்றோம்.

அதன் பின்னர் 1வது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் ஆரம்ப நாளன்று உரும்பிராய் பொது வீதியில் நிறுவுவதற்காக அன்பளிப்பாக வழங்க இருக்கின்றோம்.

இதனை யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நிறுவி வைக்க இருக்கின்றார். அதே போல 2 வது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் நிறைவில் அம்பாறை மாவட்டம் காரை தீவு பிரதேசத்தில் நிறுவ இருக்கின்றோம். இதனை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் நிறுவி வைக்க இருக்கின்றார்.

இதேவேளை திருக்குறள் ஆய்வரங்கம் மாநாட்டை பல்வேறு இடங்களில் நடாத்தினாலும் கூட யாழ்ப்பாணத்தில் இந்த மாநாட்டை நடாத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழர்கள் தமிழ் மொழியை கையாளுகின்ற விதம் தாய்த் தமிழ் என்று சொல்லுகின்ற தமிழகத்தில் கிடையாது. இங்கு கலப்பு இல்லாமல் தமிழை தமிழாகவே பேசுகின்றார்கள். தமிழர்களுடைய பழமையான மொழியினுடைய உணர்வை அப்படியே அழகாகச் சொல்லுகிறார்கள். உண்மையான தமிழ் வாழக் கூடிய இடமாக யாழ்ப்பாணத்தை நான் நினைக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் உண்மையான தமிழ் மொழியைப் பேசுகின்ற உணர்வுபூர்வமான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget