கோவில் என்பது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று விடயங்களால் சிறப்பு பெறுகிறது. நம் கோயில்களில் காணப்படும் தல விருட்சங்களில் நம் வாழ்க்கையின் ஆரோக்கியம் மறைந்திருக்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்தை வாழ்விப்பதற்காக மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை காடுகளிலும், மலைகளிலும் கண்டுபிடித்து அவற்றை எடுத்து வந்து, மக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடமான கோயில்களில் நட்டுவைத்து அவற்றையும் இறைவனோடு சேர்த்து வணங்க வைத்தார்கள்.
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக தங்களது வாழ்க்கையை சிவநெறியில் செலுத்தி தங்களது ஞானப்பார்வையால் அறிவியலே வியக்கும் வண்ணம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றிக்கொடி நாட்டியவர்கள் நம் சித்தர்கள். எந்த நாட்டவருக்கும் கிடைக்காத பொக்கிஷம் நமக்கு கிடைத்த நம் தமிழ் சித்தர்களே.
நம் சித்தர்கள் மரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய மருந்துகளை கண்டுபிடித்தார்கள். நம் கண்களுக்கு புலப்படாமல் மரங்களில் மறைந்து இருந்த மருந்துகளை தம் ஞானப்பார்வையால் கண்டுபிடித்து தந்தவர்கள்.
இயற்கையை தெய்வமாக ஏற்றுக்கொண்ட நாம் தல விருட்சங்களையும் வணங்க ஆரம்பித்தோம். விஞ்ஞானம் நம் கிராமங்களை எட்டிப் பார்க்கும் முன்பே படிப்பறிவு இல்லாத அக்காலத்திலேயே சித்தர்கள் செய்த மிகப்பெரிய காரியம் மரங்களை கோயில்களில் நட்டு இறைவனோடு சேர்த்து வணங்க வைத்ததுதான்.
கோயிலில் தல விருட்சமாக இருக்கும் மரத்தின் இலையையோ அல்லது பட்டையையோ அல்லது வேரையோ வாங்கி வந்து கசாயம் போட்டுக் குடித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டார்கள்.
இவ்வளவும் ஏன், அந்த தலவிருட்சங்களுக்கு அடியில் விழுந்து வணங்கும்போது அங்கே வீசும் காற்று அந்த மரத்தின் மருத்துவ குணத்தை சுமந்து வந்து நம் மீது படர்ந்தாலே நோய் விடுபடும் என்பதையும் அனுபவ பூர்வமாக உணர்ந்தார்கள்.

Post a Comment