ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கநெறி கொண்ட சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக பொருத்தமான விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும். கல்விக்கு இணையாக பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் பூரணத்துவமான மனிதனை சமூகத்திற்கு வழங்க முடியுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சுக்களுக்கு அதற்காக பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிக்காட்டும் பிள்ளைகளை சிறுவயது முதல் தெரிவு செய்து அவர்களுக்கு அவசியமான உரிய போசாக்கு, தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களின் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கிராமிய பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை பெற்றுத் தருமாறு கேட்டாலும் அவற்றை அமைத்துக் கொடுத்ததற்குப் பின்னர் ஒழுங்காக பராமரிக்காத நிலை பல்வேறு இடங்களில் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். புல் வெட்டுதல் போன்ற மிக இலகுவாக செய்யக்கூடிய பராமரிப்பு விடயங்களுக்கு பாரிய நிதி தேவையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment