Ads (728x90)


நவராத்திரி விரதம் என்பது இந்துக்கள் சக்தியை அன்னையின் வடிவில் வழிபடும் விரதமாகும்.

நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்கள் சக்தியை வீரத்தின் வடிவமான துர்க்கையாகவும், செல்வத்தின் வடிவமான இலட்சுமியாகவும், கல்வியின் வடிவமான சரஸ்வதியாகவும் விரதமிருந்து வழிபடுவதாகும். பத்தாம் நாள் விஜயதசமி. அன்றைய தினம் ஏடு தொடக்குதல் முதலான சுப காரியங்களை ஆரம்பிப்பது வழக்கம். நவராத்திரியுடன் இணைந்ததாக 'கொலு வைத்தல்' முதலான பாரம்பரியங்களும் இடம்பெறும்.

நவராத்திரி விரத வழிபாடு புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை அனுஸ்டிக்கப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு ஐப்பசி மாதம் முதல் நாள் அக்டோபார் 17ஆம் திகதி நவராத்திரி தொடங்குகிறது. பிரதமை தொடங்கி தசமி வரை ஒன்பது இரவுகள் அம்பிகையை அலங்கரித்து சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

உலகத்தின் இயக்கத்திற்கு சக்தி தான் ஆதாரம். சக்தி இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது. அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி விரதம். அம்மனை வழிபட்டால் அனைத்து ஆற்றலையும் பெறலாம். அந்த சக்தியை வழிபடுவதற்காக உருவானதுதான் நவராத்திரி பண்டிகை. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம். வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் முக்கியம். கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று சக்திகளை வழிபடுகின்றோம். வீரத்திற்கு மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், கல்விக்கு மூன்று நாட்கள் ஒதுக்கி ஒன்பது நாட்கள் வழிபடுகின்றோம்.

பிரதமை

நவராத்திரியின் முதல் நாளில் தேவியான மகேஸ்வரி, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இன்றைய தினம் மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

துவிதியை

இரண்டாம் நாள் தேவி கவுமாரியாக போற்றப்படுகிறாள். அவளே இராஜ இராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். 

திரிதியை

மூன்றாவது நாளுக்கு உரியவாராகிய அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

சதுர்த்தி

நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

பஞ்சமி

ஐந்தாம் நாளில் அன்னையை வைஷ்ணவியாகவும், மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும், தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.

சஷ்டி

ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. தேங்காய் சாதம் படைத்து வணங்கலாம்.

சப்தமி

ஏழாம் நாளில் தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.

அஷ்டமி

எட்டாவது நாளில் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. இந்த நாளில் அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.

நவமி

ஒன்பதாம் நாளில் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் தாமரை மலர்களால் அலங்கரித்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். 

விஜயதசமி

பத்தாவது நாள் விஜய தசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும் நாள். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

நவராத்திரி விரதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்று நாட்கள். சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும்.  

இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும். நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள். 


Post a Comment

Recent News

Recent Posts Widget