Ads (728x90)


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்கு வந்த பின்னர் முதல் இராணுவ தாக்குதல் நடவடிக்கை சிரியா எல்லையில் உள்ள ஈரானிய ஆதரவு போராளிகள் குழுக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் சிரியாவின் இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படையினரின் தளங்களை இலக்கு வைத்து ஈரானிய ஆதரவு போராளிகள் குழு ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியது. அதில் ஒரு சிவில் கான்ட்ராக்டர் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஒரு அமெரிக்க படை வீரர் மற்றும் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

இதற்கு முன்னதாக பாக்தாத்தில் ஆயுதமற்ற மண்டலமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்ட தளத்திலும் ராக்கெட் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கு தான் அமெரிக்க தூதரகம் மற்றும் வேறு சில நாடுகளின் தூதரகங்கள் இருந்தன.

இதற்கு பதிலடி தரும் முகமாகவே ஈரானிய போராளிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் தங்கள் தரப்பில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக போராளிகள் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிரியாவில் நடக்கும் மோதல்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கும் அமைப்பு குறைந்தபட்சம் 22 பேராவது உயிரிழந்திருப்பர் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய அமெரிக்க தாக்குதல், கிழக்கு சிரியாவை இணைக்கும் ஈராக்கிய எல்லை அருகே நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது. 

ஈராக்கில் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவை எதிர்கொள்வதற்காக அங்குள்ள ஈராக்கிய படைகளுக்கு துணையாக சுமார் 25 ஆயிரம் அமெரிக்க படையினர் உள்ளனர்.

இர்பில் நகரில் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 11 நாட்கள் கழித்து சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் இதுதான் அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் உத்தரவிட்ட முதலாவது இராணுவ நடவடிக்கை.

இந்த இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உளவுத்தகவல்களை பகிர்ந்த ஈராக்கிய அரசுக்கு அமெரிக்கா நன்றி தெரிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget