ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது. இந்திய இணை அமைச்சர் கலாநிதி லோகநாதன் முருகன் மற்றும் இந்திய இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அபிவிருத்தி பயணத்தில் இலங்கையையும் இந்தியா அரவணைத்து கொண்டு முன்னோக்கிச் செல்லும் என இதன்போது இந்திய இணை அமைச்சர் கலாநிதி லோகநாதன் முருகன் உறுதியளித்தார்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார மத்திய நிலையத்திற்கு, ''சரஸ்வதி மண்டபம்'' என பெயரிடுவதாக நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
கலாசார நிலையத்திற்கு நிதி அனுசரணை வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தை தொடர்ந்தே ஹிக்கடுவே ஶ்ரீ சுமங்கள தேரர் பௌத்த மறுமலர்ச்சியை ஆரம்பித்தார். எனவே ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் எமது சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.
பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலேயே வெசாக் தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் தலைவரே பொன்னம்பலம் இராமநாதன் ஆவார். 1915 ஆம் ஆண்டு குழப்பங்கள் நிலவிய காலத்தில் எமது சிங்கள பௌத்த தலைவர்களை பாதுகாத்துக் கொடுத்தவர் பொன்னம்பலம் இராமநாதன் என நான் இவ்விடத்தில் கூற விரும்புகிறேன்.
அவர்களைப் போலவே வைத்திலிங்கம் துரைசாமியையும் எம்மால் மறக்க முடியாது. சுதந்திரத்தைப் பெறுவதற்காக டி.எஸ் சேனாநாயக்க அவர்களுக்கு உதவிய அமைச்சர் சி.சுந்தரலிங்கம் , அமைச்சர் சி.சிற்றம்பலம், அமைச்சர் நல்லையா. ஆனந்த குமாரசுவாமி, அருணாச்சலம் மகாதேவா, ஜீ.ஜீ.பொன்னம்பலம் உள்ளிட்ட பல தலைவர்களையும் ஜனாதிபதி இன்றைய நிகழ்வில் நினைவுகூர்ந்தார்.
இதன் காரணமாகவே 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை யாழ்ப்பாணத்திலும் நிகழ்த்துவதற்கு தமது அரசாங்கம் திட்டமிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அத்துடன் யாழ். அபிவிருத்தி மற்றும் திருகோணமலை அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் இதற்கு இந்தியா முக்கிய பங்களிப்பு நல்குவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கையர்களாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியே தமது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
யுத்த சூழ்நிலையிலும் தமிழ் கலாசாரம் யாழிலும், புலம்பெயர் சமூகங்களாலும் பாதுகாக்கப்பட்டதாகவும் காலியில் சாகித்திய விழா நடத்துவது போன்று யாழிலும் சாகித்திய நிகழ்வை நடத்த வேண்டும் என கலாசார அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஜனாபதி தெரிவித்தார்.
அத்துடன் வீழ்ந்துள்ள நாட்டை வளமான நாடாக உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும், புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கி பயணிப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
600 பேர் வரை அமரக்கூடிய வகையில் 13 தளங்களுடன் யாழ். கலாசார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தில் மாநாட்டு மண்டபம், நவீன திரையரங்கு வசதிகள், டிஜிட்டல் நூலகம் ஆகியனவும் உள்ளன. 1.6 பில்லியன் ரூபா செலவில் யாழ். கலாசார நிலையம் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment