Ads (728x90)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற குடும்பங்களுக்கு, அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். 

வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து அவர்களது நிலைப்பாடுகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இச்சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான சந்திப்பை அடுத்து, அவர்களது கதைகளால் தான் மிகுந்த துயருற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவர்களது கதைகளைப் போலவே வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தெற்கிலும் தான் சந்தித்து, கேட்டறிந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் கதைகள், காணாமல்போன தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் உண்மை மற்றும் நீதிக்காகப் போராடிவருகின்ற தரப்பினரின் பெருந்துயரை வெளிக்காண்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget