வடக்கு மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது ஆரம்பத்தின் முதல் வெற்றியாகும். வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளோம்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும். புதிய தரப்பினர்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். மக்கள் எதிர்பார்த்த அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்குவோம் எனவும் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரச தொலைக்காட்சி ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னிலையில் உள்ளோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் உள்ளோம். ஏனைய சிங்கள கட்சிகளை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை காட்டிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் வாக்குகள் குறைவடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட எமது வேட்பாளர்கள் புதியவர்கள். அத்துடன் ஒரு தரப்பினர் எமக்கு எதிராக இனவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment