Ads (728x90)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப்பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் நடைபெற்று வரும் சாதகமான முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்த நியூசிலாந்து பிரதிப் பிரதமர், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதே நியூசிலாந்து அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தை பாராட்டிய பிரதிப்பிரதமர், நிதியுதவியை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் இலங்கைக்கு நிலையான அபிவிருத்தியை அடைய உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவியை மேலும் விரிவுபடுத்த நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதிப்பிரதமர் தெரிவித்தார்.

மக்களிடையே நீண்டகாலமாக நிலவும் பிளவுகள் நீண்டகால மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன், நல்லிணக்கச் செயல்பாட்டின் முக்கிய தூணாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு தனது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயம், கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள இந்தத் துறைகளின் முன்னேற்றத்திற்காக நெருக்கமாக செயற்படவும் இணக்கம் தெரிவித்தனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget