Ads (728x90)

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ். ஸ்ரீ நாகவிகாரை மற்றும் யாழ். பொது நூலகம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு இன்று காலை சென்ற பிரதமர், அங்கு ஆசி பெற்றார். வருடாந்தத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்குச் சென்று ஆசி பெறுவது ஒரு பாக்கியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதோடு விகாராதிபதி சங்கைக்குரிய மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து, புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அவருக்கு விளக்கமளித்தார். புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் மொழி ஒரு செய்முறைப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேசிய நூலகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இதன்போது யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது. புதிய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அங்கு வருகை தந்திருந்த பிள்ளைகளுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget