இந்தப் பகுதியில் பெரும் நிலப்பகுதிகள் சுமார் 40 அடி ஆழத்திற்கு இடிந்து விழுந்ததால், இந்த கிராமங்கள் மனித வாழ்விற்குப் பாதுகாப்பற்றதாக மாறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவி இயக்குநர் எல்.ஏ.கே.ரணவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உடத்தாவ, நெலும் மாலை, கல நாக, மட கெலே மற்றும் உட கல் தெபொக்காவ ஆகிய ஐந்து கிராமங்களே மனிதர்கள் வசிப்பதற்கு பொருத்தமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடத்தாவ கிராமத்தில் 12 இற்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முழுமையாக புதைந்துவிட்டன என்றும், இதுவரை 26 குடியிருப்பாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் இடிபாடுகளுக்கு அடியில் 30 முதல் 40 அடி ஆழத்தில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக நம்பப்படுவதால், காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளது என்றார்.
இதேநேரம் பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை நிலவிய காலப்பகுதியில், பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment