Ads (728x90)

அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். 

இதன்போது கல்வி சீர்திருத்தங்களின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் 6 ஆம் தர பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். 

தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவனம், கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு முறையான பொறிமுறையின் கீழ் இந்த செயற்பாடுகள் அமைய வேண்டும் என தொழிற்சங்கங்கள் முன்மொழிந்தன. 

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் நம்பிக்கையைப் பெறுவது சீர்திருத்தங்களின் வெற்றிக்கு மிக முக்கியமானது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். அத்துடன் முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். 

ஆனால் ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக 6 ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி விளக்கமளித்தார். 

 


Post a Comment

Recent News

Recent Posts Widget