நெல்லூர் புலாவ் / Nellore Mutton Pulao
தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி - ஒரு டம்ளர்
கறி - அரை கிலோ
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
பூண்டு - 3 பற்கள்
தேங்காய் - ஒரு மூடி
தக்காளி - 4
பட்டை - 3 அங்குல அளவு
கிராம்பு - 3
புதினா - ஒரு சிறிய கட்டு
முந்திரிப் பருப்பு - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1.கறியைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து, அதனுடன் 3 தேக்கரண்டி மிளகாய்த் தூள், சிறிது உப்புச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறிய பிறகு அதனை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பைத் தனியாக அரைத்து வைக்கவும்.
2.தேங்காயைத் துருவி அரை டம்ளர் அளவிற்கு கெட்டியான பாலாக எடுத்துக் கொள்ளவும்.
3.தக்காளி, பட்டை, பூண்டு, இஞ்சி, புதினா இலைகள், கிராம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4.ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவினைப் போட்டு வதக்கவும். பிறகு அரிசியைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
6.அத்துடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது, தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு மற்றும் வேக வைத்துள்ள கறித்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். அரிசி வெந்து பதமானதும், கொத்தமல்லித் தழைத் தூவிக் கிளறி இறக்கவும்.
7.சுவையான நெல்லூர் புலாவ் ரெடி.
Tip
அரை டம்ளர் அளவு தேங்காய்ப் பால் சேர்ப்பதால் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற வைத்துச் சேர்த்தால் சாதம் உதிரியாக வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment