பாவனா பிரச்சினையில் இறுதியில் உண்மை வென்றதில் மகிழ்ச்சியாக இருப்பதாக, அவருடைய குடும்பத்தினர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் நேற்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார். வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீஸார் பலமுறை முயன்றனர். ஆனால் அவரும் அவரது தாயாரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரும் கைது செய்யப்படக்கூடும் என்று கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பாவனாவின் குடும்பத்தார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையை பாவனாவின் அண்ணனும், 'பட்டினப்பாக்கம்' படத்தின் இயக்குநரமான ஜெயதேவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: இறைவனுக்கு நன்றி இந்தப் பிரச்சினையில் இறுதியில் உண்மை வென்றுள்ளதில் மகிழ்ச்சி. ஆரம்பத்திலிருந்தே வழக்கு விசாரணைக்கு ஏற்பட்ட பல்வேறு குறுக்கீடுகளுக்கு இடையேயும் உண்மை வெற்றி பெற இறைவனே துணை நின்றிருக்கிறார்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் மேல்முறையீடு செய்யாததற்கு கேரள காவல்துறை மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையுமே காரணம்.
எங்களுடன் துணை நின்ற அனைவருக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்காக குரல் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக எந்தவித அழுத்தத்துக்கும் அடிபணியாமல் நடவடிக்கை எடுத்த கேரள போலீஸாருக்கு நன்றி.
உலக முழுவதும் பல்வேறு திக்குகளில் இருந்தும் எங்கள் மீது நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. குற்றவாளிகள் அனைவருமே சிறைக்கு அனுப்பப்படும்வரை அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார் ஜெயதேவ்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டு இருப்பதால், திரையுலகினர் பலரும் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்
Post a Comment