அப்பாவின் படங்களில் என்னால் நிச்சயம் நடிக்க முடியாது என்று 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' தொடர்பாக அளித்த பேட்டியில் அதர்வா தெரிவித்துள்ளார்.
ஓடம். இளவரசு இயக்கத்தில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, ப்ரணிதா, சூரி, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
ஜூலை 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் குறித்து அதர்வா கூறியிருப்பதாவது:
இதுவரை நான் வெவ்வேறு வித்தியாசமான கதையில் நடித்துள்ளேன். 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நடித்த பிறகு தான் எனக்கு காமெடி நன்றாக வரும் என்று எனக்கே தெரியும்.
எனக்கு ரொம்ப நாளாக காமெடி கலந்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் நிறைய காமெடி கதைகள் கேட்டுள்ளேன். அதை கேட்கும் போது எனக்கே சிரிப்பு வராது. முதலில் எனக்கு சிரிப்பு வந்தால் மற்றவர்களுக்கும் சிரிப்பு வரும். ’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் கதையை கேட்கும் போது முதல் பத்து நிமிடத்திலேயே இப்படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது தெரிந்து விட்டது
முதல் 10 நிமிடக் கதையைக் கூறியவுடனே, நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். ஜெமினிகணேசன் சார் என்றால் ’லவ்வர் பாய்' என்று எல்லோரும் சொல்லுவார்கள் அவர் ஒரு 'காதல் மன்னன்'. அவருடைய பெயரை வைத்துக்கொண்டு நான் ஒரே ஒரு நாயகியுடன் நடிக்க முடியாது. என்னுடைய தந்தை காதல் சொல்லாத மன்னன்.
இப்படத்தில் நடித்த 5 கதாநாயகிகளுடனும் மகிழ்ச்சியோடு தான் நடித்தேன். எனக்கு பெண்கள் ரசிகர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமான ஒன்றாகும். சினிமாவுக்கு வரும் போது என்னுடைய தந்தையின் படங்களை பார்த்து வரவில்லை. அப்பாவும் அவருடைய படங்களைப் பார்க்க வேண்டாம் என்று தான் கூறுவார்.
அப்பாவின் படங்களில் என்னால் நிச்சயம் நடிக்க முடியாது. அவர் இருந்திருந்தால் என்னுடைய படங்களைப் பார்த்து என்ன சொல்லி இருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும், இதில் நடிக்க வேண்டாம் என்று சொல்லித் தர யாருமில்லை. நான் நடித்த ஒவ்வொரு படங்களும் புதுமையான படங்கள் தான்.
சூரி அண்ணாவோடு நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். அவர் நடித்த புஷ்பா புருஷன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதைப் போன்ற ஒரு காமெடி படத்தில் அவரோடு நடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது. அது எனக்கு இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது
Post a Comment