இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் தீர்மானமிக்க மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பகலிரவுப் போட்டியாக நடைபெறவுள்ள இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இப்போட்டித் தொடரை இலங்கை அணி இழக்காமல் இருக்க வேண்டுமானால், இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
குறிப்பிட்ட நேர த்திற்குள் பந்து வீசாத குற்றத்துக்காக இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க 2 போட்டிகள் தடையை எதிர்கொண்டுள்ள காரணத்தால், அடுத்துவரும் இரு போட்டிகளுக்கு சாமர கப்புகெதர அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதித்த சாமர கப்புகெதர 100 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். எனினும் இலங்கை அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்கின்றமை இதுவே முதற்தடவையாகும்.
தரங்கவுக்கு தடை விதிப்பு, தனுஷ்க குணதிலக்கவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களுக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களாக தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
5 போட்டிகள் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியை விடவும் இலங்கை அணி வெற்றி கொள்வதற்கு முயற்சிக்கும்.எனினும், பலம்பொருந்திய இந்திய அணியை வெற்றிகொள்வதென்பது இலகுவான காரியமல்ல.
ஏனெனில், துடுப்பாட்டம், பந்துவீச்சு களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் இலங்கை அணியை விடவும் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக விளங்கிய இளம் சுழற்பந்துவீச்சாளரான அகில தனஞ்சய இப்போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக விளங்குவார்.மேலும், அனுபவ வீரர்களான சந்திமால், திரிமான்ன ஆகியோரின் வருகை இலங்கை அணிக்கு புது உத்வேகத்தை அளிக்கும்.
குறிப்பாக 19 மாதங்களுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள திரிமான்ன இன்றைய போட்டியில் ஆரம்ப வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லசித் மாலிங்க பந்துவீச்சில் தொடர்ந்து சோபிக்கத் தவறி வருகிறார். அவரும் தனது சிறந்த ஆட்டத்திறனுக்கு திரும்பும் பட்சத்தில் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெறும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Post a Comment