Ads (728x90)

வடக்கில் இருபது வருடங்களாக ஊழியர்கள் ஆளணி உருவாக்கம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் இருபது வருடங்களுக்கு முன் காணப்பட்ட சனத் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட் ஆளணியினரே தற்போதும் பணியாற்றி வருகின்றனா் என கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளா் சந்திப்பின் போது அகில இலங்கை  அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினர்  குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அவா்கள் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த இருபது வருடங்களில் சனத் தொகை அதிகரித்திருக்கிறது, பிரதேச சபைகள் நகர சபைகளாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும்  அந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது. தேவைகளும், சேவைகளும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு தேவைகளும், சேவைகளும்  அதிகரித்த நிலையில் காணப்பட ஊழியர்களின் ஆளணி மட்டும் பழைய நிலையிலேயே உள்ளது. இதனால் இருக்கின்ற ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனா்.
மேலும் ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு இன்னும் எட்டப்படவில்லை, பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை, பல வெற்றிடங்களுக்கு  ஆளணி நிரப்பப்படவில்லை இந்த நிலைமை நீண்ட காலமாக தொடர்கிறது. 
வட மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரின் கவனத்திற்கு மேற்படி விடயம் தொடர்பில் பல தடவைகள் கொண்டு சென்ற போதும் அவரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை வட மாகாண சபையின் ஆட்சிக்காலம்  இன்னும் ஒரு வருடமும் ஒரு மாதமுமே இந்தக் காலத்திற்குள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிகையில்லை. 
இவ்வாறானதொரு நிலைமைக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடும், உள்ளூராட்சி  திணைக்களத்தின் செயற்திறனற்ற நிலைமையுமே காரணம்,
அத்தோடு தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஆளணி உருவாக்கம் செய்யப்பட்டு ஊழியர்கள் உள்வாங்கப்படுவாா்களாக இருந்தால் சுமாா் மூவாயிரம் பேருக்கு வடக்கில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும்.
அகில இலங்கை  அரசாங்க பொது ஊழியர் சங்கமானது ஊழியர்களின் நலன்கள் சார்ந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒரு தலைமைத்துவதின் கீழ் செயற்படுகின்றோம் எனவே அதனை குழப்பும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளா்கள் செயற்பட்டு வருகின்றனா்.
எங்களுடைய சங்கத்தின் கடித தலைப்பை மோசடியாக பயன்படுத்தியுள்ளதோடு, சங்கத்தின் புதிய செயலாளரையும் தாக்கியுள்ளனா். இவா்களின் இவ்வாறான   நடவடிக்கை தொடரும் பட்சத்தில் நாம்  நீதிமன்றம் செல்வதற்கும் ஆலோசித்து வருகின்றோம் " எனவும் தெரிவித்தனா்.
இப் பத்திரிகையாளர் சந்திப்பில் அகில இலங்கை  அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உப தலைவர் அ.அன்ரனி, நிர்வாக ஆலோசகர் செ.இராசையா, கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா இணைப்பாளர்களான ஆ.புண்ணியமூர்த்தி,  சி. சற்குணராஜா, ந.தேவகிருஸ்ணன்,  ஆ.சூரியகுமாா் ஆகியோரும் கலந்துகொண்டனா்.

Post a Comment

Recent News

Recent Posts Widget