
கடந்த திங்கட்கிழமை பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில், பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, அர்ஜுன மகேந்திரனையும் அர்ஜுன் அலோஸியஸையும் ஆணைக்குழுவில் ஆஜர் செய்யும் வரை மக்கள் எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார்.
அதன்பின்னர் இடம்பெற்ற சட்ட வாதங்களின் பின்னர் அர்ஜுன் அலோஸியஸ் தான் சாட்சியம் வழங்க விரும்பவில்லை என அறிவித்திருந்தார். இந் நிலையில் தற்போது அர்ஜுன மகேந்திரனை ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சாட்சியமளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அர்ஜுன் மகேந்திரன் ஆணைக்குழுவின் அறிவித்தல் பிரகாரம் ஆஜராகாமல் இருந்தால் ஆணைக்குழு தமக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் செயற்படும் என ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின் றன.
எவ்வாறாயினும், 'பர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ் நேரடியாக தான் அறிந்தவற்றை சாட்சியமாக வழங்க வேண்டும். இதுவே எமது அபிப்பிராயம். எனினும் அர்ஜுன் அலோஸியஸ் அவை தொடர்பில் கண்டிப்பாக சாட்சியம் அளிக்க வேண்டும் என நாம் அவரை கட்டாயப்படுத்த முடியாது.
அவர் சாட்சியம் அளிக்க மறுத்தாலோ அல்லது விருப்பமின்மையை வெளிப்படுத்தினாலோ ஆணைக்குழுவானது தான் சேகரித்துள்ள சாட்சியங்களின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை முன்னிறுத்தி அர்ஜுன் மகேந்திரனும் செயற்படலாம் என நம்பப்படும் நிலையில் அவ்வாறு இடம்பெற்றால் அது ஆணைக்குழு விசாரணைக்கு மேலும் தடங்கல்களை ஏற்படுத்தும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் விரும்பினால் சாட்சியம் வழங்கலாம் என்ற ஆணைக் குழுவின் தீர்ப்பானது முற்றிலும் தவறானது என பதில் சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா சுட்டிக்காட்டும் நிலையில் ஆணைக்குழுவின் குறித்த தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபருடன் உடனடியாக கலந்துரையாடி, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment