ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார்.
இலங்கையிலிருந்து நேற்று வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச்சென்ற அவர் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவை அமர்விலும் அதனை அண்மித்து நடைபெறும் 15 இற்கும் மேற்பட்ட உப அமர்வுகளிலும் மீளாய்வு தொடர்பான அமர்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற மனித உரிமை, மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஐ.நா.சபையில் இணை அனுசரணை வழங்கி தீர்மானங்களை நிறைவேற்றினாலும், வாக்குறுதிகளை அள்ளி வழங்கினாலும் பொறுப்புக்கூறும் விடயத்தினை தட்டிக்கழித்தே வருகின்றமையை சுட்டிக்காட்டவுள்ளதாகவும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றின் ஊடாகவே நிதி வழங்கப்படவேண்டும் என்பதை தமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்முறையும் வலியுறுத்தவுள்ளதாகவும் தமிழ்த் தேசிய முன்னணி மேலும் தெரிவித்துள்ளது. முன்னதாக வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.தியாகராஜா, கஜதீபன், புவனேஸ்வரன், முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோர் 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்றிருந்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள், சர்வதேச விசாரணை யூடாகவே நியாயமான தீர்வினைப்பெற முடியும் போன்ற விடயங்களை பல்வேறு சர்வதேச தரப்புக்களிடத்திலும் எடுத்து ரைக்கவுள்ளதாக அக்குழுவிற்கு தலைமை தாங்கிச் செல்லும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment