
சட்டவரைவுக்கு அரசுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்பன ஆதரவு வழங்கின. மகிந்த அணி எதிர்த்து வாக்களித்தது. 157 வாக்குகள் ஆதரவாகவும், 37 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.
மாகாண சபைகளின் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்குடன் அரசு கொண்டு வந்த 20ஆவது திருத்தச் சட்டவரைவு உயர் நீதிமன்ற வியாக்கியானத்தையடுத்து கைவிடப்பட்டது.
உடனடியாக மாற்று ஏற்பாட்டைச் செய்த அரசு, ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு கிடப்பிலிருந்த மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவை தூசி தட்டி, நேற்றுக் காலை இரண்டாவது வாசிப்புக்கு எடுத்துக் கொண்டது. மகிந்த அணியின் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியிலேயே விவாதம் நடைபெற்றது. சட்டவரைவு இரண்டாம் வாசிப்பு முடிவடைந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் கிடைத்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது.
இதனால், இந்த மாத இறுதியில் ஆயுள் காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடத்த முடியாது. நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டவரைவில் சபாநாயகர் கையெழுத்திட்டதும், அது எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள் முடிவடைந்த பின்னர், எல்லை நிர்ணய அறிக்கை, மாகாண சபைகள் அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும். அவர் அதனை வர்த்தமானியில் பிரசுரித்த பின்னரே, தேர்தல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment