சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நான்காவது நாளாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிப் பகிஷ்கரிப்பின் நான்காவது நாளான இன்றைய தினத்தில் அனுராதபுரம், குருநாகல், கண்டி, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீந்த டி சொய்சா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சைட்டம் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள நடை முறை சிக்கல் குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றினை தயாரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது சிலரின் அரசியல் தேவைப்பாடுகளுக்கமைய மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி சட்ட ரீதியானது என்பதை காட்டுவதற்கு முயற்சிக்கின்றது.
இதேவேளை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக சைட்டம் மருத்துவ கல்லூரியை தடைசெய்ய வேண்டும் அல்லது அதனை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் வேலைநிறுத்தத்தினையும் மேற்கொண்டு வருகின்றோம். இருப்பினும் இதுவரையில் அரசாங்கத்தினால் எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
எனவேதான் இதற்கு எதிராகவும் சைட் டம் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போரா ட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மாவட்ட ரீதியில் சுழற்சி முறையில் சகல வைத்தியசாலைகளிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதன்போது வேலைநிறுத்தம் இடம்பெறும் மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் சைட்டம் எதிர்ப்பு பதாகைகள் மற்றும் கறுப்புக்கொடி என்பனவும் பறக்கவிடப்படும். அத்துடன் இது தொடர்பில் மாவட்ட ரீதியில் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு தொடர்வாகன பேரணியொன்றினையும் முன்னெடுத்து வருகின்றோம். இந்த பேரணியானது எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என்றார்
Post a Comment