Ads (728x90)

பி ஸ்டார் புரொடக்ஷன் சார்பில் 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் நெடுநல்வாடை. இது தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவுக் கதை. தாத்தாவாக பூ ராமு நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம்கோபி, செந்தி நடிக்கிறார்கள். செல்வ கண்ணன் இயக்கியுள்ளார், வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோஸ் பிராஃங்ளின் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் இன்றி பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கும் வைரமுத்து இதுகுறித்து கூறியிருப்பதாவது:

கிராமத்து வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதையில், இன்னும் அறுந்து போகாத தமிழ்க் கலாச்சாரத்தின் பழைய வேர்களைத் துப்பறிந்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன். நம் உறவுகள் புனிதமானவை. நம் உறவுகள் ஆழமானவை. அந்த உறவின் பெருமையை, மகள் வழிப்பேரனை ஒரு தாத்தா எப்படியெல்லாம் நேசிக்கிறார் என்ற அடிப்படைப் பண்பாட்டை "நெடுநல்வாடை"யில் செல்வகண்ணன் விவரித்துக் கொண்டே போகிறார். இந்தப் படம் தமிழர்களின் உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், உச்சத்தையும் சொல்லும் படமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு கிழவன் செய்கிற தியாகம்தான் "நெடுநல்வாடை"யின் மொத்தக்கரு. தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை. தியாகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட "நெடுநல்வாடை"யும் வெல்லும். செல்வகண்ணன் பேர் சொல்லும்.

தமிழ் சினிமாவை தலைப்புப் பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது. தமிழில் பேர் வைத்தால்தான் வரிச்சலுகை கிட்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு தமிழ் சினிமாவில் தலைப்புகள் தமிழைவிட்டு தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு தமிழ் இலக்கியத்தின் தலைப்பை, தனக்கு ஆபரணமாகச் சூடிக்கொண்டு வெளிவரப் போகிற படம்தான் "நெடுநல்வாடை".

இந்தப் படத்திற்குப் பாட்டெழுதியது எனக்கு ஒரு சுகமான அனுபவம். நெல்லை மாவட்டத்து வட்டார வழக்கில் எழுதுங்கள் என்றும், ஆங்கிலச் சொல்லே கலவாமல் முழுக்க முழுக்க தமிழ்ப்பாட்டு எழுதுங்கள் என்றும் இயக்குனர் செல்வகண்ணன் கேட்டபோது நான் மகிழ்ந்து போனேன். ஒரு படத்தில் பாட்டு என்பது, உடலில் தொங்குகிற ஆடையாக இல்லாமல் உடம்பில் ஒட்டியிருக்கும் தோல் மாதிரி இருக்கவேண்டும் என்று நம்புகிறவன் நான். படத்திற்கும் பாட்டுக்கும் இடைவெளியே இருக்கக் கூடாது. படத்தின் அங்கம்தான் பாட்டு. இந்த இலக்கணத்தை "நெடுநல்வாடை"யில் நீங்கள் காண்பீர்கள். என்கிறார் வைரமுத்து.

Post a Comment

Recent News

Recent Posts Widget