Ads (728x90)

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் 72வது அமர்வின்போது ஜனாதிபதி - குட்டெரஸ் இடையிலான சந்திப்பு நேற்று (23) நடைபெற்றது. இதன்போதே குட்டெரஸ் மேற்படி கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான உதவிகளை உலக நாடுகளிடம் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் நிரந்தர சமாதானம், அபிவிருத்தி என்பனவற்றை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலைத் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக ஐ.நா. பொதுச் செயலாளரை இலங்கைக்கு வருமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பின்போது, 2030ஆம் ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி தொடர்பிலும் காலநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஹெய்ட்டியில், ஐ.நா. மேற்கொண்ட வாந்திபேதி ஒழிப்புத் திட்டத்திற்கு இலங்கை வழங்கிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்த அன்டோனியோ, அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget