
அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் பௌத்த மக்களின் உயர் பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து இரண்டும் இருவேறு நிலைப்பாடுகளை இதுவரை வெளிப்படுத்தியிருந்தன.
மல்வத்து பீடத்தினர், நாட்டைப் பிரிக்காத அதிகாரப் பகிர்வுக்கு இணக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். அஸ்கிரிய பீடம் இதற்கு எதிரான நிலைப்பாட் டில் உள்ளது. ஒற்றையாட்சி தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அது இறுக்கமான நிலைப்பாட்டில் உள்ளது.
இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்கள் இணைந்து இடைக்கால அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாடுகளை எதிர்வரும் வியாழக் கிழமை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக, அஸ்கிரிய பீடத்தினரைச் சமாளித்து இடைக்கால அறிக்கையுடன் இணங்கச் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்க அரசு திட்டமிட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல அஸ்கிரிய பீடத்தினரை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பேச்சின் முடிவில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
புதிய அரசமைப்பு முழுமைப்படுத்தப்படவில்லை. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் யோசனைகளே உள்ளடக்கப்பட்டுள்ளன. பரந்த விவாதத்தை நாம் நாடாளுமன்றத்தில் முன்னெடுப்போம். சகல கட்சிகளினதும் ஆதரவுடன் மாத்திரமே இதனை தடைகளின்றி முன்னெடுக்க முடியும். நாடாளுமன்றத்தில் சகல தரப்பினரும் ஆதரித்தால் மட்டுமே மக்களின் முழுமையான ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் அரசமைப்பு உருவாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருக்கவில்லை. இப்போது அவ்வாறு அல்லாது தமிழர் தரப்பினர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி புதிய அரசமைப்பை ஆதரிக்கும் நிலமை காணப்படுகின்றது.
பௌத்தம் தொடர்பிலும், ஒற்றையாட்சி என்ற விடயத்திலும் மாற்றுச் சிந்தனையை முன்னெடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இவை தொடர்பில் விவாதிக்கவே தேவையில்லை. போரின் பின்னர் இந்த நாடு புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. புதிய ஆரம்பம் ஒன்று அவசியம் என்று மக்கள் எதிர்பார்த்து செயற்படும் நிலையில் இதுவரையில் அவ்வாறான ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இனங்களுக்கு இடையேயான அவநம்பிக்கை இன்றும் உள்ளது. தமிழர் சிங்களவரை நம்புவதில்லை, சிங்களவர் முஸ்லிம்களை நம்புவதில்லை என்று இனங்களுக்கு இடையிலான குழப்பங்கள் இன்றும் தொடர்கின்றது.
சகல மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் சகல கட்சிகளும் இணைந்து நாட்டுக்கு தேவையான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்க முடியுமாயின் அதுவே நல்லிணக்கத்தை வெற்றிகொள்ளும் முக்கிய வழியாகும். புதிய ஆரம்பம் ஒன்றை உருவாக்க புதிய அரசமைப்பு அவசியமாகும்.
மகாநாயக தேரர்களை நிராகரித்து எந்தச் செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது. சிங்கள மொழியில் ஒரு வகையிலும் ஆங்கிலத்தில் வேறு விதமாகும் அரசமைப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். நீதிமன்றத்தில் சிங்கள பிரதியினையே அங்கீகரிப்பார்கள். சிங்களப் பிரதியில் ஒற்றையாட்சி, பௌத்த முன்னுரிமை என்ற அனைத்துமே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தப் பிரச்சினைகளும் ஏற்படப்போவதில்லை. பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் சிலர் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் அதனை நாம் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை – என்றார்.
Post a Comment