
வேறு தரப்பினரை பணிக்கு அமர்த்தி எமது செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். நவம்பர் மாதத்திற்குள் அனைத்து நஷ்டஈடுகளும் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் அசமந்த போக்கினால் ஹெலிகொப்டரில் இருந்தே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டு பணத்தை மேலிருந்து வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த கலந்தாய்வின் போது இலங்கை வங்கி மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் வருகை தராமையினால் அதிருப்தியடைந்த பிரதமர், அவர்களை தன்னை வந்து சந்திக்குமாறும் உத்தரவிட்டார்.
மாத்தறை, மொரவக பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி வழங்கல் செயற்திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அரச ஊழியர்களுடனான கலந்தாய்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அரசாங்கம் வழங்குவதில் பின்நிற்கவில்லை. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் உரிய நிதி உதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று பாதிக்கப்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான அரசாங்கத்தின் கடன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எனினும் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள் உரிய முறையில் மக்களை சென்றடையவில்லை. அனர்த்த நிவாரணம் உரிய முறையில் சென்றடையாமல் இருப்பதற்கு அரச ஊழியர்களே பிரதான காரணமாகும். மக்களுக்கு சேவை செய்வதற்கே அரச ஊழியர்கள் உள்ளனர். எனவே உங்களால் மக்களுக்கு சேவை செய்ய முடியுமாயின் பதவியில் இருங்கள். இல்லையேல் உடனே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இராஜினாமாக் கடிதத்தை வழங்கி செல்லுங்கள்.
உங்களால் முடியாவிட்டால் வேறு தரப்பினரை பணிக்கு அமர்த்தி எங்களால் செய்ய முடியும். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே அரச ஊழியர்கள் உள்ளனர். அரச ஊழியர்களின் அசமந்த போக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டு பணத்தை ஹெலிகொப்டர் மூலம் மேல் இருந்து வீச வேண்டியுள்ளது. எனவே அரச ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் வரையும் காலக்கெடு வழங்குகின்றேன் என்றார்.
இதன்போது அரச ஊழியர்கள் தமக்குள்ள குறைபாடுகளை விபரித்தனர். குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மாகாண அரசு தடையாக உள்ளது என்றனர். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய அரசாங்கத்தின் செயற்திட்டங்களை மாகாண அரசு கட்டாயம் அமுல்படுத்தி தீர வேண்டும். எனவே இது குறித்து தென் மாகாணத்தின் ஆளுநருடன் நான் பேசுகின்றேன் என்றார்.
இதனையடுத்து சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் தொடர்பான பிரச்சினை குறித்து பிரதமர் அவதானம் செலுத்தினார். இதன்போது இலங்கை வங்கி மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் வருகை தரவில்லையா? என கேட்ட நேரம் அவர்கள் அவையில் இருக்கவில்லை. இதன்போது இரு வங்கிகளின் தலைவர்களையும் தன்னை வந்து சந்திக்குமாறும் உத்தரவிட்டார்.
Post a Comment