
மாகாண முதலமைச்சரின் விருப்பத்திற்கு அமைய ஆளுநரை நியமிக்கும் யோசனை ஒன்று புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதானது ஈழத்துக்கான அடித்தளம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிவிதுரு ஹெல உறுமய நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்த போது பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் இலங்கையில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என்பதை நான் மிகவும் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.
இலங்கையில் ஒரு காலத்தில் அரசியல் கைதிகள் இருந்தனர், 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஜே.வி.பி, கொம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜ கட்சிகளை தடை செய்த போது அதன் தலைவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்களை அரசியல் கைதிகள் என கூறினார்
கள். அவர்கள் உண்மையிலேயே அரசியல் கைதி கள்தான். அவர்களை அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் ஆயுதம் ஏந்தி இந்த நாட்டில் பிரிவினையினை தூண்டிய விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் இன்றுவரையில் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே உள்ளது. இறுதி யுத்தத்தில் பிடிபட்ட புலிகள் இன்றும் சிறையில் உள்ளனர். அவர்களை அரசியல் கைதிகள் என கூறமுடியாது. ஆயுதத்துடன் சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு இன்று சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களை எமது அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பினர் சிறையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதம் ஏந்திய விடுதலைப்புலிகளை அரசியல் கைதிகளாக அர்த்தப்படுத்தி அவர்களை விடுதலை செய்யகூறி போராட்டம் நடத்துகின்றனர். தொடர்ச்சியாக அவர்கள் இதே நிலைப்பாட்டில் இருந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் இல்லாத யுத்த குற்றம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் இந்த நாட்டினை காப்பாற்றிய எமது இராணுவத்தினரை தண்டிக்க வேண்டும் என்ற அழுத்தத்தினையும் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலில் ஒரு நிலைப்பாட்டில் கருத்து தெரிவிக்க வேண்டும். ஒன்று யுத்த குற்றத்தில் இராணுவத்தை தண்டிக்க வேண்டும் என்றால், மறுபுறம் வடக்கில் ஆயுதம் ஏந்தி கொழும்பிலும் அனைய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்ற விடுதலைப்புலிகளையும் யுத்த குற்றத்தில் தண்டிக்க வேண்டுமா? அல்லது விடுதலைப்புலிகளை அரசியல் கைதிகளாக கூறி பொது மன்னிப்பு வழங்குவதை போலவே இராணுவத்தையும் பொது மன்னிப்பில் விடவேண்டுமா என்ற ஒரு நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும். இராணுவத்தை மட்டுமே தண்டித்து விடுதலை புலிகளை விடுதலை செய்ய கோரும் கருத்து நியாயமற்றதாகும்.
மேலும் மாகாண முதலமைச்சரின் விருப்பத்திற்கு அமைய ஆளுநரை நியமிக்கும் யோசனை ஒன்று புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. எனினும் ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் மாகாண பிரதிநிதியாவார். அவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் உள்ளது. இதுவரை காலமாக இந்த வழக்கமே உள்ளது. எனினும் புதிய அரசியல் அமைப்பில் இந்த அதிகாரம் முழுமையாக முதலமைச்சரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.
இவ்வாறு செயற்படுவதன் மூலமாக வடக்கு பிரதேசம் ஈழநாடாக பிரிந்துசெல்ல பிரதமர் வழிசமைத்துள்ளார். மாகாணசபை அதிகாரங்களை வழங்குகின்றனர், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குகின்றனர், படிப்படியாக ஜனாதிபதியின் அதிகாரங்களை பறித்துக்கொண்டு மாகாண
சபை தன்னிச்சையாக செயற்படும் வகையில் அரசாங்கமே பாதையினை அமைத்துக் கொடுக்கின்றது. இவற்றின் இறுதி ஈழமாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்
Post a Comment