
இதேவேளை இன்றைய தினம் நாடு முழுவதும் 2400 மெட்ரிக் டன் பெற்றல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. கனிய கனிய எண்ணெய் வள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினமும் இதே அளவான பெற்றல் விநியோகம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளையதினம் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை அடையும் என்றும், 9ம் திகதி காலை முதல் பெற்றோல் விநியோகம் சீரடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் எந்த ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் மூடி வைப்பதானது சட்டவிரோதமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றாலும், டீசல் விநியோகம் சீராக இடம்பெறுகிறது.
எனவே டீசல் வழங்குவதற்காக வேனும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக பெற்றோலை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினமும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெற்றோலுக்கான தட்டுப்பாடு நிலவியது.
இதனால் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தரங்குறைந்த எரிபொருளை ஏற்றிவந்த கப்பலில் இருந்த பெற்றோலை நாட்டில் இறக்குவதற்கு அனுமதி அளிக்குமாறு தமக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆனால் தாம் அதற்கு அனுமதிவழங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேநேரம் நிலவும் பெற்றோலுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 9ஆம் திகதி நிவர்த்திக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Post a Comment