
விவாதிக்க வருபவர்கள் இடைக்கால அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு வரவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌத்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
கூட்டாட்சியை (சமஷ்டி) முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் சிங்களவர்கள். இதை முதலில் பிரிட்டிஷாரிடம் பரிந்துரை செய்தவர்கள் கண்டியச் சிங்களவர்கள். அதனால் கூட்ட◌ாட்சியைச் சிங்கள மக்களுக்கு எதிரானது என்று எவரும் கூறமுடியாது. இந்த விடயங்களை அவர்கள் பயப்படாமல் இருக்கும் வகையில் கூறவேண்டும்.
ஒரு நாட்டின் அரசமைப்பு மக்கள் பார்த்துப் பயப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது. சொற்களைக் கண்டு பயந்தால் அந்தச் செற்களைத் தள்ளி வைத்துவிட்டு உள்ளடக்கங்களைப் பார்க்கவேண்டும்.
70 ஆண்டுகளாக எமது மக்களின் வேணவாக்களாக இருந்த, எங்களை எமது மாநிலத்தில் ஆட்சி செய்கின்ற அதிகாரம் இருக்கிறதா இல்லையா? என்று பார்க்க வேண்டும். சொற்களை வைத்து போலித் தேசிய வாதம் பேசாதீர்கள்.
அனைத்து நாடாளுமன்றச் சட்டங்களும் மாகாணசபை நியதிச் சட்டங்களும் துணைநிலை சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றப்படுதல் வேண்டும் என்று உபகுழு அறிக்கையிலே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பிலே சிங்களம் மேலோங்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. மூன்று மொழிகளுக்கும் சம அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை விடயங்கள் இடைக்கால அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளது என்று எவராலும் கூற முடியாது. நாங்கள் தற்போது அரைவாசித் தூரம்தான் வந்துள்ளோம். இது சரிவரும்; சரிவராமலும் போய்விடலாம்.
சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினாலே இப்போதே வெளிவாருங்கள் என்று கூறும் மூடன் யார்? மூடத்தனமாக மக்களைத் தேவையில்லாது உசுப்பேத்தி அவர்களுக்குள்ளே வீணாகப் பீதியை உருவாக்கி இதுவரை நாங்கள் இழந்த இழப்புகளுக்கு மாற்றீடாக ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும் வாய்ப்பை நாங்களே மழுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் – என்றார்.
முறக்கொட்டான்சேனை தேவபுரம் இலங்கை கிறிஸ்தவ சமூக மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் கிளையின் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று தெற்குப் பிரதேச கிளைகளின் ஏற்பாட்டில், இந்த நிகழ்வு நடைபெற்றது.
நிமலன் சௌந்தரநாயகம் உயிரிழந்து 17 வருடங்கள் ஆகின்றது. இதுவரை காலமும் அவரது நினைவு தினம் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த ஆண்டே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இதனை முன்னெடுத்துள்ளதாக, நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிலர் குழப்பம் விளைவித்திருந்தனர்.
Post a Comment