உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராயவுள்ளது.இந்தக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமையன்று இடம் பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பில் தன்னால் இப்போதைக்கு கருத்துக் கூறமுடியாது (நோ கமென்ட்ஸ்) என்று மட்டுமே கூறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசெம்பர் 4 வரை இடைக்காலத் தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்றுப் பிறப்பிக்கப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி சபைகளுக்கு ஜனவரி மாத இறுதியில் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.
எதிர்வரும் 27ஆம் நாள், வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவது பிற்போடப்படும் சூழல் எழுந்துள்ளது.
Post a Comment