Ads (728x90)

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவியை பறிப்போம் என்று ஆளும் கட்சி எச்சரித்துள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது. இதன்பின் அந்த கட்சி இசட்.ஏ.என்.யு.-பி.எப். என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சுருக்கமாக ஜனு பி.எப். என்று அழைக்கப்பட்டது.

சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் ஜனு பி.எப். கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கட்சி ஆதரவுடன் தலைநகர் ஹராரேவில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இதுகுறித்து கட்சி தலைவர் ஒருவர் கூறியபோது, “முகாபே பதவி விலக வேண்டும். இல்லையெனில் அவரை பதவிநீக்கம் செய்வோம். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கட்சி கூட்டத்தில் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார். அடுத்த அதிபராக எம்மர்சன் பதவியேற்பார் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget