Ads (728x90)


கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதி மிக்க கடக ராசி அன்பர்களே!

சனி பகவான் உங்கள் ராசிக்கு  5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார்.  அவர் ஐந்தில் இருக்கும் போது பல்வேறு இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் பிரச்னை, கணவன், -மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருக்கும்.  இந்த நிலையில் சனிபகவான் தனுசு ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இதனால்,  பணப்புழக்கம் அதிகரிக்கும்.

 முயற்சியில் வெற்றி உண்டாகும்.  அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம் என சனிபகவானால் அபரிமிதமான நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கிறார். இதனால் மன உளைச்சல், உறவினர் வகையில் வீண் பகை உருவாக்குவார். இருந்தாலும் குருபகவான் 2018 பிப். 14-ல் விருச்சிக ராசிக்கு மாறிய பின், குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.  பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும்.  புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். இது சுமாரான நிலை தான்.  அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.  முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். கேது  7-ம் இடமான மகரத்தில் இருப்பதும் சிறப்பு என்று  சொல்ல முடியாது. 7-ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்னை, அலைச்சல் ஏற்படலாம்.  எதிரி தொல்லை உருவாகலாம். உடல் நலம் சுமாராகவே இருக்கும்.

2018 ஜனவரி –  2019 பிப்ரவரி பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். மனதிலும், உடலிலும் புத்துணர்வு மேலோங்கும்.  குருபகவான் 2018 பிப்.14-ல்  சாதகமான இடத்துக்கு வருகிறார். அதன் பின் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார்.  கணவன், -மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.  தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். சேமிக்கும் விதத்தில் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரம் வளர்முகமாக இருக்கும். தொழிலாளர் ஆதரவு வளர்ச்சிக்கு துணை நிற்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.  2018 பிப்.14க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். புதிய வியாபார முயற்சி நல்ல  அனுகூலத்தை கொடுக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பகைவர் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையில் ஏற்பட்ட அனுகூலமற்ற போக்கு மறையும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.  தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.  எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும்.  குருபகவான்  2018 ஏப்.9-  முதல் செப்.3- வரை வக்ரம் அடைந்து, துலாம் ராசியில் இருக்கும் போது பிரச்னை குறுக்கிட வாய்ப்புண்டு.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பெறுவர். பொது மக்களிடையே நற்பெயர் உண்டாகும்.

மாணவர்கள்  முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். குரு பகவானின் வக்ர காலத்தில் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.

விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் செய்ய வேண்டாம். வருமானத்திற்கு குறைவிருக்காது.  வழக்கு,  விவகாரத்தில் சமரசபேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது.

பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். 2018 பிப்.14 க்கு பிறகு தடைபட்ட, சுபநிகழ்ச்சி கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் நன் மதிப்பை பெறுவீர்கள். குரு பகவான் 2018 ஏப். 9- முதல் செப். 3-  வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது சற்று நன்மை குறையும்.  கேதுவால் உடல்நலனில் பாதிப்பு வந்தாலும் நொடிப்பொழுதில் மறைந்து விடும்.

2019 மார்ச் – 2020 மார்ச் ராகு உங்கள் ராசியில் இருந்து மிதுனத்திற்கு மாறுகிறார். கேது,  மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.  தற்போது கேது நன்மை தரும் 6-ம் இடத்திற்கு வந்திருப்பதன் மூலம்  பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும்.  செயலில் அனு கூலம் உண்டாகும். கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலனை தர இயலாது. பொருள் விரயம், தூரதேச பயணத்தையும் கொடுப்பார்.

குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். இது சுமார நிலையே.ஆனால் அவர் 2019 மே 19-  முதல் அக்.27- வரை வக்ரம் அடைந்து விருச்சிக ராசியில்  இருக்கிறார். அப்போது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி வகையில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வீடு, மனை வாங்க யோகம் உண்டு.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும்.  தொழில்ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். கணினித் தொழில், அச்சுத் தொழில், பத்திரிகை, தரகு, ஆன்மிகம் தொடர்பாக தொழில்கள் சிறப்படையும்.

பணியாளர்கள் சீரான பலனை எதிர் பார்க்கலாம். வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். குருபகவானின்  வக்ரகாலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. வேலை இன்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.   அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டியதிருக்கும். குருபகவானின் வக்ரகாலத்தில் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். 

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர்.  உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
2020 ஏப்ரல் – டிசம்பர்  2020ஆக. 31-ல் ராகு, மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கும், கேது,  தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கும் மாறுகின்றனர். ராகுவால் பொன், பொருள் கிடைக்கும்.  மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக  இருப்பர்.  ஆனால் கேதுவால் நன்மை தர இயலாது. எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம்.

குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தி லாபம் காண்பீர்கள்.  கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள், சிறப்பான பலனை பெறலாம். மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவர். விவசாயத்தில் அதிக மகசூலும், அதற்கேற்ப லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  பெண்கள் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும்.  உடல்நலம் சீராக இருக்கும்.

பரிகாரப்பாடல்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயேமாய் வந்து நாம் துாமலர் துாவித் தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பரிகாரம்:
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
● வளர்பிறை சஷ்டி அன்று முருகனுக்கு நெய் தீபம்
● பவுர்ணமியன்று விரதமிருந்து கிரிவல வழிபாடு.

Post a Comment

Recent News

Recent Posts Widget