
திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் கோவிலில், தீபத்திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான பரணி தீபம், ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 3.20 மணிக்கு வெகு விமர்சையாக நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழாவில் முக்கிய திருவிழாவான இன்று மாலை 6:00 மணிக்கு மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு அதிகாலை 2.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், சமேத வள்ளி தெய்வானை முருகர், சமேத உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில் ஸ்வாமி மூல கருவறையில் கற்பூர தீபம் ஏற்றி, முத்து குருக்கள் தலைமையில், சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, வேத மந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் சுவாமி மூல கருவறையில் எதிரில் ஐந்து மடக்குகளில் அதிகாலை 3:20 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் விநாயகர் சந்நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும், தீபங்கள் ஏற்றப்பட்டது. மாலை 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 6 மணிக்கு அனேகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. அப்போது, பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரம் முன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
Post a Comment