
தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம் என கூறுவது மிக மிக நகைப்புக்குரியது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,
யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டங்களை நடாத்தியுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏக்கிய இராஜ்ய என்பதற்கு இணங்கியுள்ளது. ஆனால் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை விட்டு கொடுக்கபோவதில்லை என கூறியுள்ளார். அதனுடைய உண்மையான அர்த்தம் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கியுள்ளது என்பதேயாகும்.
ஏக்கிய இராஜ்ய என்பது ஒருமித்த நாடு என சுமந்திரன் கூறினாலும், உண்மையில் அது ஒற்றையாட்சியேயாகும். அதனை சிங்கள தலைவர்கள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தங்களுடைய மக்களுக்கு கூறுகிறார்கள். ஒற்றையாட்சியை தவிர ஒன்றும் கொடுக்கவில்லை என ஆனால் சுமந்திரன் போன்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாம் சார்ந்த மக்களுக்கு மிக கேவலமான பொய்யை சொல்கிறார்கள். இதனைவிட மோசமான செயல் ஒற்றையாட்சிக்கு இணங்கிய பின்னர் தமிழ் மக்களின் நீண்டகால அபிiலாஷை களை வென்றெடுப்போம் என்று கூறுவதேயாகும்.
இதனை மக்களை மடையர்களாக்கும் கருத்தாகவே நான் பார்க்கிறேன். ஆக மொத்தத்தில் ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டார்கள், வடகிழக்கு இணைப்பை நிராகரித்துவிட்டார்கள், பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதற்கும் இணங்கிவிட்டார்கள் இதற்கு பின்னர் இடைக்கால அறிக்கைக்கு வக்காளத்து வாங்கும் சுமந்திரன் கூறுவதுபோல், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெறவது எப்படி என்பது எனக்கு தெரிய வில்லை.
இலங்கை கணக்காளர் தரம் 3 பரீட்சை நிறுத்தப்பட்டமை தொடர்பாக.
இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ற்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கடந்த 2016ம் ஆண்டு கோரப்பட்டு 2017ம் ஆண்டு அதற்கான பரீட்சைகள் நடைபெற்றன. இதன் ஊடாக தமக்கு வேலைகள் கிடைக்கும் என சுமார் 75ற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் எந்த காரணமும் கூறப்படாமல் அந்த பரீட்சை முடிவகள் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், திடீரென மீள்பரீட்சை ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கான காரணம் ஏற்கனவே நடைபெற்ற பரீட்சையில் அதிக படியான தமிழ் இளைஞர், யுவதிகள் பரீட்சையில் சித்தியடைந்தமையேயாகும். இவ்வாறு சட்டக்கல்லூரி தேர்விலும் அதிகபடியான தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் தேர்வான நிலையில் பிக்குகள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள். எனவே இந்த பரீட்சை முடிவுகள் இரத்து செய்யப்பட்டு மீள் பரீட்சை நடத்தப்படுகின்றமை தமிழ் இளைஞர், யுவதிகள் அதிக இடங்களில் சித்தி பெற்றமை காரணம் என்றால் இது ஒரு இனவாத செயற்பாடாகும்.
இது தொடர்பாக தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இனிமேலாவது இது தொடர்பாக பேசி தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை பெற்று கொடுக்கவேண்டும். என்பதுடன் பரீட்சை முடிவுகள் எதற்காக இரத்து செய்யப்பட்டன என்பதையும் அறிந்து வெளிப்படுத்தவேண்டும்
முல்லைத்தீவு- வட்டுவாகல் காணி சுவீகரிப்பு
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 640 ஏக்கர் காணி கட்படையினால் சுவீகரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பல தடவைகள் பொதுமக்கள் தங்கள் காணிகளை சுவீகரிக்க விடாது தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்தார்கள்.
எனினும் தொடர்ச்சியாக அந்த காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது சகித்து கொள்ள இயலாத விடயமாகும். வடமாகாணத்தில் கடற்படை முகாம்கள் சந்திக்கு சந்தி இருக்கும் நிலையில், புதிதாக மக்களுடைய காணிகளை அபகரித்து அமைக்கவேண்டிய தேவை உள்ளதா? தமிழ் மக்களுக்கு எல்லாம் செய்வோம் என கூறும் தமிழ்தேசிய கூட்டமைப்பும், அதன் தலைவரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்
தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயர்
தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளதாக அறிகிறோம். ஆனால் உத்தியோகபூர்வமாக எமக்கு ஒரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு ஊடகம் அந்த செய்தியை பிரசுரித்திருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும், அதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் தாங்களும், புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் செயற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பு என்னும் பெயர் தமக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறியுள்ளதாக அறிகிறோம்.
உண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாகும். எங்களுடைய தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பும் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமானால் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழரசு கட்சியை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே அது அமையும். எனவே எமக்கு இதுவரை உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டால் அது தொடர்பாக சட்டரீதியாக பேசுவதற்க்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். வேட்பாளர்கள் இது தொடர்பாக அலட்டி கொள்ளதேவையில்லை என்றார்.
Post a Comment