Ads (728x90)

உலக கோப்பைக்கான ஹொக்கி 
போட்டி (ஆண்கள்) 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் நடந்த தொடக்க போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த 2 போட்டிகள் 2 ஆண்டுகள் இடைவெளியிலும், 4 வது போட்டி 3 ஆண்டுகள் இடைவெளியிலும் நடைபெற்றது.

1978-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை ஹொக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

இந்த நிலையில் 14-வது உலக கோப்பை ஹொக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று 28-ந் திகதி தொடங்கி டிசம்பர் 16-ந் திகதி வரை நடக்கின்றது.

இதில் 16 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, ‘சி’ பிரிவில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 5-வது இடத்தில் இருக்கும் இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா, ‘டி’ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். கடைசி இடம் பெறும் அணிகள் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும்.

ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் ‘கிராஸ் ஓவர்’ முறையில் மற்ற பிரிவில் 2-வது, 3-வது இடத்தை பெறும் அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். வருகிற 9-ந் திகதியுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. 2-வது சுற்று ஆட்டங்கள் 10, 11-ந் திகதிகளில் நடக்கின்றது. 12, 13-ந் தேதிகளில் கால்இறுதி ஆட்டமும், 15-ந் தேதி அரைஇறுதி ஆட்டமும், 16-ந் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகின்றது.

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை உச்சி முகர்ந்து இழந்த பெருமையை மீட்டெடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்திய அணி உலக கோப்பையை ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அஜித் பால்சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிகபட்சமாக 5-வது இடத்தையே பெற்றுள்ளது. கடந்த முறை இந்திய அணி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இத்தொடரில் தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு கடும் சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், துடிப்பு மிக்க இளம் வீரர்களும் சம அளவில் இடம் பிடித்துள்ளனர்.

2016-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய 7 இளம் வீரர்கள் இந்த உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர். தடுப்பு ஆட்டத்தில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தினால் இந்திய அணி சாதிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget